6 டிரங்க் பெட்டிகளில் ஒட்டியாணம் முதல் காசு மாலை வரை! ஜெயலலிதாவின் நகைகள் என்னென்ன தெரியுமா?
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை மதிப்பீடு செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில் அதில் என்னென்ன நகைகள் இருந்தன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து பத்திரங்கள், புடவைகள், வாட்ச்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு கர்நாடகா நீதிமன்றத்தில் நடந்ததால் இவை எல்லாம் கர்நாடகா கருவூலத்தில் இருந்தன. இந்த நிலையில் அவற்றை எல்லாம் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்து 14, 15 ஆகிய இரு தினங்கள் பெங்களூரில் இருந்து வந்த அதிகாரிகள், நீதிபதி மோகன் முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுமார் 6 பெட்டிகளில் எடுத்து வரப்பட்ட நகைகள், மதிப்பீடு செய்யப்பட்டு தமிழக போலீஸாரின் பெட்டிக்குள் வைத்து சீலிடப்பட்டன. 1000 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் ஒப்படைத்துவிட்டோம் என கூறி தமிழக அரசிடம் கர்நாடகா அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை 3.30 மணிக்கு நீதிபதி அறையில் இருந்து இரும்பு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.

மூன்றாவது மாடியில் உள்ள நீதிபதி அறையில் இருந்து லிப்ட் மூலம் 6 பெட்டிகளும் கிரவுன்ட் ஃப்ளோருக்கு கொண்டு வரப்பட்டன. இந்த பெட்டிகளை கொண்டு செல்ல தமிழகத்தில் இருந்து ஏ.எஸ்.டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வேன் வரவழைக்கப்பட்டது.
அதில்தான் இந்த 6 பெட்டிகளும் ஏற்றப்பட்டன. அந்த வாகனத்துடன் 7 எஸ்கார்ட் வாகனங்களும் தமிழகம் நோக்கி புறப்பட்டன. ஓசூர் வரை வந்த கர்நாடகா அதிகாரிகள், பத்திரமாக செல்லுமாறு கூறி, தமிழக அதிகாரிகளை நகை பெட்டியுடன் அனுப்பி வைத்தனர்.
சில நகைகளில் வைரம், மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட கற்கள் இருந்தன. இரண்டு கிலோ ஒட்டியாணம், ஒரு கிலோ கிரீடம், ஒன்றரை கிலோ தங்க கத்தி, 60 கிராம் எடையுள்ள தங்க பேனா, தங்க கைக்கடிகாரம், தங்க வாள், காசு மாலை ஆகியவை இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு பேருந்து தற்போது சென்னை சிறப்பு விசாரணை குழு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த பஸ்ஸுக்கு யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. எனவே அந்த பஸ்ஸை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை தமிழக அரசு தன் வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
கர்நாடகா கருவூலத்தில் ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகள் எல்லாம் இல்லை. சென்னை, தஞ்சை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 1512 ஏக்கர் நில ஆவணங்களும் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications