கிளாம்பாக்கம் கிளம்பியாச்சா? விரைவில் பஸ் ஸ்டாண்டு திறப்பு விழா.. புதுசா கிளம்பிருச்சே.. மறுபடியுமா?
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் முக்கிய கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ரூ.400 கோடி செலவில், 40 ஏக்கர் பரப்பளவில், சகல வசதிகளுடன் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.. கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே பஸ் ஸ்டாண்டு திறந்திருக்க வேண்டும்.. ஆனால், போதுமான வடிகால் வசதிகள் இல்லாமல் இருப்பதும், மழைநீர் பஸ் ஸ்டாண்டு வாசலிலேயே தேங்குவதும், பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணியிருந்தது.

திறப்பு விழா: எனினும், இந்த பணிகள் ஓரளவு முடிவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதியில் திறப்பு விழா நடத்தும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேசமயம், அதற்கு முன்பேயே, மற்ற அறைகள் போன்றவற்றை சோதனை முறையாக திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது..
கடந்த மாதம் 100 அரசு பஸ்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் பேருந்துகளை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், தென், வட மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் வண்டலூர் பூங்கா அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அடையும் வகையில் சோதனை ஓட்டமானது சமீபத்தில் நடைபெற்றது.
குறைபாடுகள்: அரசு விரைவு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகளை இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டதில், சில குறைபாடுகள் தென்பட்டுள்ளதாம்.. இந்த குறைகளையும் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோ, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
பணிமனை: "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்காக, முழுமையான நிறுத்துமிடம், எரிபொருள் நிரப்புமிடம், பணிமனை அமைக்க உரிய இடம் ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் வாயிலாக தெரியப்படுத்தி இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு, 358 பேருந்துகளை இயக்குகிறோம். மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு, 202 பேருந்துகளை இயக்குகிறோம்.
இந்த பேருந்துகள், வெளியூரில் இருந்து திரும்பிய பிறகு, மீண்டும் புறப்படும் வரை, 8 மணி நேரம் சென்னையில் நிறுத்தி வைக்கப்படும். இந்நிலையில் கிளாம்பாக்கத்தில், எங்கள் போக்குவரத்து கழகத்தின், 100 பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதான முனையத்துக்கு எதிரில் உள்ள காலி இடத்தை, எஞ்சிய 102 பேருந்துகளை நிறுத்த பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அந்த இடம் தற்போது, ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டதாக அறிகிறோம்.
பேருந்து நிறுத்தம்: எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய, 102 பேருந்துகளை நிறுத்துவதற்கான இடவசதியை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எழுதப்பட்டிருக்கிறதாம்.
இந்த பஸ் முனையம் கட்டி முடிக்கப்பட்டதற்கு பணி நிறைவு சான்றிதழ் அரசிடமிருந்து இன்னும் பெறப்படவில்லை என்ற தகவல் கசிந்து வரும்நிலையில், 102 பஸ்களை நிறுத்துவதற்கான இடவசதியையும் கோரியிருப்பதால், இதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரமாகி வருகிறார்களாம்.. எனினும், திறப்பு விழாவை பெரிதும் எதிர்நோக்கியிருக்கிறார்கள் சென்னைவாசிகள்..!












Click it and Unblock the Notifications