பரந்தூர் விமான நிலையம்! மத்திய அரசு அனுமதி கொடுத்தாச்சு! கட்டுமான பணிகள் எப்போது?
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படுகிறது என தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே அதிக விமானங்கள் வந்து செல்ல வசதியாக சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை தமிழக அரசின் டிட்கோ (தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம்) செயல்படுத்துகிறது. விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 20 கிராமங்களில் 5,321 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் வருவாய் துறை இறங்கியுள்ளது.
இதற்காக மேல் பொடவூர், சிறுவள்ளூர், பரந்தூர், உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு, நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு வருவாய்த் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவள்ளூர் கிராமத்தில் 249 பேர் பாதிக்கப்படக்கூடிய வகையில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் அடங்கி உள்ள 42 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேபம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என நாளிதழில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவள்ளூர் கிராமத்தில் பாதிக்கப்படக்கூடிய கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்துக்கான நிலம் எடுப்பு திட்ட அலுவலகத்துக்கு நேரில் வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிறுவள்ளூர் கிராமத்தில் தங்கள் நிலங்களை கையகப்படுத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி தங்கள் நிலங்களை எடுக்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்து மனுக்களை அளித்தனர். விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தவிர பல துறைகளின் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையம் மொத்தம் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இதன் மொத்த செலவு ரூ 29,150 கோடியாகும். முதல் கட்டமாக 2029ஆம் ஆண்டு 2.5 கோடி பயணிகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி 2028 ஆம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல இரண்டாம் கட்டமாக 2036 ஆம் ஆண்டு கூடுதலாக 3.5 கோடி பயணிகளை கையாளவும் அதற்கான பணிகளை 2033 ஜனவரியில் தொடங்கி 2035 ஆம் ஆண்டு டிசம்பரில் முடிக்கப்படவுள்ளது. மூன்றாம் கட்டம் 2041 ஆம் ஆண்டு தொடங்கி 2044 டூ 2046 ஆம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 4 கட்ட பணிகளும் முடிவடைந்தால் பரந்தூர் விமான நிலையத்தில் 2047 ஆம் ஆண்டு 10 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக மாறியிருக்கும்.












Click it and Unblock the Notifications