யாருக்கெல்லாம் ஏப்ரல் 19 லீவு? தேர்தலுக்கு லீவு தர தவறும் நிறுவனம் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை
சென்னை: தேர்தல் நடைபெறும் நாளன்று யாருக்கெல்லாம் விடுமுறை தெரியுமா? அன்றைய தினம் விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தொழிலாளர் நலத்துறை கடுமையாக எச்சரித்திருக்கிறது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க போகிறது..

எச்சரிக்கை: 19 வாக்குப்பதிவு என்பதால், 17-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும். அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளிலிருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
அதுபோலவே, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் 10000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம்தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைகோர்ட்: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வாக்குப்பதிவு நாளில் விடுமுறை ஆகும். ஆனால் அரசு போக்குவரத்து துறைக்கு விடுமுறை இல்லை.
முன்னதாக, தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார்கள் தெரிவிக்க வசதியாக மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது..
ஆணையர்: இந்நிலையில், தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் துறை இணை ஆணையர் -1, சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951. பிரிவு 135(பி)ன் கீழ், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 19.4.2024 அன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
ஊதியத்துடன் விடுப்பு: பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக்கூலி/ தற்காலிக/ ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான 19.4.2024 அன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும், என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான 19.4.2024 அன்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விடுப்பு நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும் பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும், என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புகார்: மேற்கண்டவாறு தேர்தல் நடைபெறும் நாளான 19.4.2024 அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் சென்னை மாவட்டத்திற்கு வடசென்னை/ தென் சென்னை/ மத்திய சென்னை என தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications