ஜஸ்ட் அப்பதான் எடப்பாடி, ஓபிஎஸ்சை மீட் செய்தார்.. உடனே டிஸ்மிஸ்.. புகழேந்தி நீக்கத்தின் பரபர பின்னணி
சென்னை: பாமகவை விரமச்னம் செய்த வா.புகழேந்தி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதன் பின்னணி என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர் வா.புகழேந்தி. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது பெங்களூரில் அவருக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டவர்.
இதன் மூலமாக ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவர் மத்தியிலும் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றவர் புகழேந்தி.

சசிகலா ஆதரவாளர்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து பேசுவது இவரது வாடிக்கையாக இருந்தது. அமமுகவின் தூண் போல செயல்பட்டார். ஆனால் தினகரன் பக்கம் பலவீனப்பட்டு சென்ற நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து அதிமுக பக்கம் தாவி வந்தார்.

அன்புமணி பேச்சு
இதன் பிறகு அதிமுக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டு, அக்கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, பிற கட்சிகளை விமர்சனம் செய்தார். சமீபத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை, பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார்.

புகழேந்தி பதிலடி
இதையடுத்து, புகழேந்தி நேற்று செய்தியாளர்களிடம் பாமக குறித்து பேசினார். அப்போது, பாமகவுக்கு 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி, ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் என பதிலடி கொடுத்தார்.

அப்போதுதான் சந்தித்து சென்றார்
இந்நிலையில் இன்று, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றபோது அதிமுக தலைமை அலுவலகம் சென்ற வா.புகழேந்தி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார். ஆனால், அவர் அங்கேயிருந்து கிளம்பிய சில மணிநேரங்களில் அதிமுக கட்சியில் இருந்து அவரை நீக்குவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. அது புகழேந்திக்கும் தெரிந்துதான் சமாதானம் பேசுவதற்காக சென்றிருக்க கூடும் என்கிறார்கள்.

கூட்டணிக்குள் குழப்பம்
அதேநேரம், புகழேந்தியின் சமாதானத்தை அதிமுக தலைமை ஏற்கவில்லை. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்துகொண்டு அதிமுகவில் செயல்படுகிறார், அவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார், அவரது ஆலோசனையின்பேரில்தான் அதிமுக-பாமக கூட்டணியில் குண்டு வைக்கும் நடவடிக்கையில் புகழேந்தி இறங்கியுள்ளார், என்று சில தகவல்கள் அதிமுக தலைமைக்கு சென்றதால் இதுபோன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மீண்டும் அவர் சசிகலா ஆதரவாளராக செயல்பட தொடங்குவார் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications