ஓ.. தைலாபுரத்துக்கு "மெசேஜ்".. அதைவிடுங்க, வீரமணி கார்கிட்ட வந்தது யாரு? "அவங்களா": சீறிய திருமாவளவன்
பாஜகவை சாடிய திருமாவளவன், தன்னுடைய கூட்டணி நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தி உள்ளார்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் நடத்தியிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 2 முக்கிய விஷயங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. வழக்கம்போல், பாஜகவை சாடியிருந்த நிலையில், விசிக கூட்டணியை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி உள்ளார் திருமாவளவன்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் வாகனத்தின்மீது கடந்த காலங்களில் பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில சமயம் பொதுக்கூட்டங்களிலும் வன்முறை தாக்குதல்களை எதிர்தரப்பினர் நடத்தி உள்ளனர்.
ஒவ்வொருமுறை, இப்படியான வன்முறைகள் நடக்கும்போதெல்லாம் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றுதிரண்டு கி.வீரமணிக்கு ஆதரவாக நின்று, அந்த வன்முறை நிகழ்வை கண்டிப்பார்கள்.

வைகோ பளீர்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் என பல தலைவர்கள், கி.வீரமணிக்கு ஒரு பிரச்சனை என்றால், உடனே குரல் கொடுப்பதுடன், இத்தகைய வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள்.. அப்படித்தான், சமீபத்தில், விருதாச்சலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு மூத்த தலைவர் கி.வீரமணி சென்றிருந்தார்.. அப்போது அவரது வாகனத்தை சிலர் வழிமறித்து தாக்க முயன்றுள்ளனர்.. இதற்கு முதல்நபராக வந்து கண்டனம் தெரிவித்தவர் திருமாவளவன் ஆவார்..

திருமா ஆவேசம்
உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டு, "இந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தும், போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லையே, ஏன்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று திருமாவளவன் காட்டமாக கூறியிருந்தார்.. இந்நிலையில்தான், நேற்றைய தினமும் இதே பிரச்சனையை கையில் எடுத்து பேசியிருந்தார் திருமாவளவன். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்வதாக குற்றம்சாட்டிய திருமாவளவன், இதற்காகவே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நேற்றைய தினம் நடத்தியுள்ளார்.

வேல்முருகன்
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கேஎஸ் அழகிரி, மதிமுக துரை வைகோ, வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய திருமாவளவன், "தமிழ்நாட்டில் பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது.. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து திமுக அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன..

பிளானிங் என்ன
சமீபத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும்போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போலவே தமிழகத்திலும் தேர்தல் நெருங்கும்போது வன்முறையை தூண்ட ஆர்எஸ்எஸ் திட்டமிடும் என்று முதல்வர் ஸ்டாலினை எச்சரித்தார். அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக திடீரென பாஜக ஆர்எஸ்எஸ் காட்டுகிறார்கள். இதை விட அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? தமிழ்நாட்டில் தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர், பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர்.

வீரமணி கார்
திமுக ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். பாமக- பாஜக அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக பாமக இருக்கும்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்க மாட்டோம்... அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்" என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

தைலாபுரம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டதாக கூறி, திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு அதை நடத்தியும் காட்டியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதே பாஜகதான் என்றும், பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளால்தான் வன்முறையே தூண்டப்படுகிறது என்றும்கூறி விசிக நேற்றைய தினம் நடத்திய இந்த கண்டன ஆர்ப்பாட்டம், மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. அத்துடன், தங்கள் கூட்டணி பற்றிய நிலைப்பாட்டையும் நேற்றைய தினமும் திருமாவளவன் தெளிவுபடுத்தியதை பாமக - பாஜக கட்சிகள் உற்றுநோக்கியும் வருகின்றன.

ஆளூர் ஆளூர்
வரும் எம்பி தேர்தலில், பாமக திமுகவுடன் கூட்டணி வைக்க முயல்வதாக ஒருபேச்சு அடிபட்டு வருகிறது. .அதற்கேற்றபடி, சில சம்பவ நிகழ்வுகளிலும் திமுகவை, பாமக நெருங்கியே வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், பாமகவுடனான கூட்டணி பற்றி திமுக இதுவரை எதையுமே வெளிப்படையாக சொல்லவில்லை.. சில மாதங்களுக்கு முன்பு விசிகவின் ஆளூர் ஷாநவாஸ், நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு சிறப்பு பேட்டியினை தந்திருந்தார்.. அதில், "பாமக திமுக கூட்டணிக்கு வந்தால், விசிக என்ன செய்ய போறாங்க என்று கேட்கிறார்கள்.. பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருக்க மாட்டோம்.. பாமக கூட்டணிக்குள் வருவதை திமுகவே திரும்பவில்லை.. இதுதான் உண்மை" என்று கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications