மீண்டும் வருகிறதா கொரோனா பேரலை! லாக்டவுனுக்கு வாய்ப்பு இருக்கா? டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சென்னை: கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு ஒமிக்ரான் வைரஸில் ஏற்பட்ட திரிபுதான் காரணம் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், இதன் தீவிரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 'ஒன்இந்தியா' யூடியூப் சேனலுக்கு விளக்கமாக பேட்டியளித்துள்ளார்.
வைரஸ் பாதிப்பு: இந்த உலகில் மனிதர்கள் உருவானதிலிருந்தே, தொடர்ந்து உயிர்வாழ ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இருப்பினும், நோய் தொற்றுகள் ஏற்படுத்திய நெருக்கடி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது. அம்மை நோய் தொடங்கி பிளேக் நோய் வரை வைரஸ் கிருமிகள் மனிதர்களை கொன்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் கொரோனா வைரஸ் தொற்று. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் இந்த தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிரம்: அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வைரஸ் 70 லட்சம் மக்களை கொன்று குவித்திருக்கிறது. 70 கோடிக்கும் அதிகமானோரை பாதித்திருக்கிறது. இருப்பினும் இதற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பெரும் பலனை கொடுத்தது. கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்தாலும், இந்த தடுப்பு மருந்து ஓரளவுக்கு பலன் கொடுத்தது. ஆனால் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.
ஜேஎன் 1: ஓமிக்ரான் BA.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு 'ஜேஎன் 1' எனும் புதிய வகை கொரோனா வைரஸ்தான் இந்த திடீர் பரவலுக்கு காரணம். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கண்டறிப்பட்ட இது, சீனாவிலும், சிங்கப்பூரிலும் அடுத்தடுத்து பரவியது. சிங்கப்பூரில் இது மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்த அளவில் கேரளாவில் முதியவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு டாக்டர் ஃபரூக் அப்துல்லா விளக்கமாக பேட்டியளித்துள்ளார்.
ஜேஎன் 1 தீவிரமானதா?: "இந்தியாவை பொருத்த அளவில் கொரோனா வைரஸின் முதல் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது தீவிரமாக இருந்ததால் லாக்டவுன் போடப்பட்டு பெரும்பாலான மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதன் பின்னர் இரண்டாவது அலை உருவானது. இதற்கு இடையில் தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பாதிப்புகள் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை. தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. அதேபோல தற்போது திரிபு அடைந்து பரவி வரும் 'ஜேஎன் 1' வைரசும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

பூஸ்டர் டோஸ் அவசியமா?: பலருக்கும் இருக்கும் கேள்வி இது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு திரிபுகளை அடைந்திருக்கிறது. எனவே இதற்காக அமெரிக்காவில் அப்டேட்டட் தடுப்பூசிகளை தயாரிக்க தொடங்கிவிட்டனர். இப்போது அவர்கள் இந்த தடுப்பூசியைதான் பூஸ்டர் டோஸாக செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்த அளவில் ஏற்கெனவே நாம் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
இந்த 'ஜேஎன் 1' வரைஸ் ஒமிக்ரானின் திரிபுதான். எனவே நாம் அச்சப்பட தேவையில்லை. ஏற்கெனவே நாம் செலுத்திக்கொண்ட தடுப்பூசிகள் போதுமான வீரியத்துடன்தான் இருக்கும். மட்டுமல்லாது இந்த 2 ஆண்டுகளில் நம்மில் பலருக்கும் கோவிட் வந்து சென்றிருக்கலாம். அது போதுமான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கும்.
தொற்று பாதிப்பை தவிர்க்க: என்னதான் நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அது ஆளை உலுக்கி எடுத்துவிடும். எனவே வெளியில் செல்லும்போது முககவசம் அணிவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சளி, காய்ச்சல் இருப்பது உறுதியானால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வதை தவிர்க்க வேண்டும். இவற்றை பின்பற்றுவதன் மூலம் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
உணவு முறை: நோய் பரவலை எதிர்கொள்ள உணவு முக்கிய பங்காற்றுகிறது. புரத சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ளும்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும், விரைவில் குணமடைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைச்சி, பால், முட்டை, மீன், பயிறு வகைகளில் புரதம் அதிகமாக இருக்கிறது.
லாக்டவுன் வருமா?: முதன் முதலில் தொற்று பாதிப்பு தீவிரமாக பரவிய நிலையில் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பின. உயிரிழப்புகள் அதிகரித்தது எனவேதான் லாக்டவுன் போடப்பட்டது. ஆனால், இந்த லாக்டவுன் தொற்று பாதிப்பை குறைக்காது என அறிவியல் ரீதியில் நிரூபணமாகியுள்ளது. எனவே இனி லாக்டவுன் வருவதற்கான வாய்ப்புகள் கிடையாது. கடந்த கால அனுபவங்களை கொண்டு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை நாம் அதிகரித்திருக்கிறோம். மீண்டும் தொற்று உச்சத்தை எட்டினாலும் அதை எதிர்கொள்ளும் அளவு நம்மிடையே போதுமான வசதிகள் இருக்கின்றன.
அறிகுறிகள் என்ன?: சாதாரண இருமல், காய்ச்சலுடன் வயிற்றுவலி, வயிற்று போக்கு ஏற்படும். எனவே இது குறித்து அச்சப்பட தேவையில்லை. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications