யார் அது.. அந்த மூத்த தலைவரா சூர்யா ஆடியோவை "லீக்" பண்ணது? விசாரித்த அண்ணாமலை? 5 கேள்விகள்!
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புயலை கிளப்பி இருக்கும் திருச்சி சூர்யா ஆடியோ அதன் தலைவர் அண்ணாமலைக்கு மிகப்பெரிய பிரஷரை கொடுத்து உள்ளது. முக்கியமாக ஆடியோவை லீக் செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த ஆடியோ திருச்சி சூர்யாவுடையது என்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும், பாஜக நிர்வாகி டெய்சி சரண்.. அந்த ஆடியோவின் உண்மை தன்மை பற்றி உறுதி செய்துள்ளார். பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஆடியோ பற்றி உறுதி செய்துள்ளார்.
அதேபோல் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக செய்தி தொடர்பாளர்களும் இந்த ஆடியோ உண்மை என்று உறுதி செய்துள்ளனர். அதிலும் டெய்சி சரண்.. 15 நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ பற்றி அண்ணாமலைக்கு தெரியும். அவர் திருச்சி சூர்யாவை கண்டித்து இருந்தார் என்று டெய்சி சரணும் இந்த ஆடியோ பற்றி தெரிவித்து உள்ளார்.
டெய்சி சரணுடனான ஆடியோ! சைதை சாதிக்கைவிட திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு ரொம்ப மோசம்.. காயத்ரி
கேள்விகள்
இந்த ஆடியோ எழுப்பிய சில கேள்விகள்தான் தமிழ்நாடு பாஜகவில் புயலை கிளப்பி உள்ளது.
1. பாஜகவில் கடுமையான உட்கட்சி பூசல் நிலவுகிறது.
2. பெண்கள் பதவி பெறுவதற்கு பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுவதாக திருச்சி சூர்யா தெரிவித்தது சர்ச்சையாகி உள்ளது.
3. இதில் திருச்சி சூர்யா கட்சி நிர்வாகி ஒருவரின் பெயரை கூறி உள்ளார். அந்த நிர்வாகி பெயர் இதற்கு முன்பே கே டி ராகவன் விவகாரத்தில் அடிபட்டது.
4. கே டி ராகவன் விவகாரத்தில் அமைக்கப்பட்ட மலர்க்கொடி ஆணையம் என்ன ஆனது?
5. இப்போது இருக்கும் ஆடியோவை லீக் செய்தது யார்?
அண்ணாமலை விசாரணை
இதில் சூர்யாவிற்கு எதிரான புகாரை கட்சி ஒழுங்கு ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இன்று அதற்கான ரிப்போர்ட்டை இவர்கள் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆடியோவையோ லீக் செய்ததது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஆடியோவை லீக் செய்தவர்கள் தொடர்பாக அண்ணாமலை விசாரணை செய்து வருகிறாராம். முதலில் ஊடகம் ஒன்றிற்கும் பின்னர் திமுகவின் ஐடி விங்கிற்கும் இந்த ஆடியோ சென்றுள்ளது. இதை யார் அனுப்பி இருப்பார்கள் என்று அண்ணாமலை உட்கட்சி விசாரணை நடத்தியதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடியோ லீக்
இந்த ஆடியோ லீக் ஆனவுடன் நெட்டிசன்கள் பலரும் காயத்ரி ரகுராம்தான் ஆடியோவை லீக் செய்ததாக விமர்சனங்கள் வைத்தனர். அதாவது இந்த ஆடியோ பாஜகவினர் இடையே கடந்த சில நாட்களாக சுற்றி வந்துள்ளது. அதில்தான் காயத்ரி ரகுராம் அந்த ஆடியோவை லீக் செய்துள்ளார் என்று கூறப்பட்டது. அண்ணாமலையுடன் இருந்த மோதல் காரணமாக காயத்ரி ரகுராம் இந்த ஆடியோவை லீக் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் காயத்ரி இதை மறுத்து உள்ளார்.
மூத்த நிர்வாகி
பாஜகவை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகி ஒருவருக்கு இந்த ஆடியோ போனதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் நிர்வாகிக்கும் - அண்ணாமலைக்கும் பல நாட்களாக கருத்து வேறுபாடு உள்ளது. அவர் மிகவும் சீனியர். இருவரும் பெரிதாக சந்தித்துக்கொள்வதே இல்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள மோதல் காரணமாக அந்த பெண் சீனியர் நிர்வாகி ஆடியோவை லீக் செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் யார்தான் ஆடியோவையோ லீக் செய்தது என்பது உறுதியாகவில்லை. பாஜகவில் இன்னமும் இது புரியாத புதிராக உள்ளது.
என்ன நடந்தது?
இது தொடர்பாக டெய்சி சரண் செய்துள்ள ட்வீட்டில், பாஜக வை விட சிறந்த கட்சி, தலைவர் அண்ணாமலையை விட திறமையான தலைவரை நாம் ஒருநாளும் பெற்றுவிட முடியாது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் கால அவகாசம் கொடுத்து பொறுமை காக்க வேண்டும். ஆடியோ ரிலீஸ் பண்ணியவர்களை தலைமை கண்டுபிடிக்க வேண்டும். வாழு! வாழ விடு என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டு உள்ளார். சூர்யா விஷயத்தில் முறையாக தலைவர் அண்ணாமலை அவர்களிடம் புகார் செய்து,பின் கட்சி முக்கியஸ்தர்கள் மூன்று பேரிடம் நடவடிக்கைக்காக ஆடியோவை கொடுத்தேன்.ஆடியோ நக்கீரனுக்கு வருவதற்கு முன்னே கட்சிக்குள் பரவுவது அறிந்து அதி்ர்ந்து போனேன்!இப்படி ஒரு கேவலமான ஆடியோவை எப்படி நானே ரிலீஸ் செய்வேன்!, என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார். ஆடியோ வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோவை ஒன்று டெய்சி ரிலீஸ் செய்திருக்க வேண்டும் அல்லது சூர்யா ரிலீஸ் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் பாஜகவில் இந்த ஆடியோ பகிரப்பட்ட நபர்கள் யாராவது ரிலீஸ் செய்திருக்க வேண்டும்., என்று கூறியுள்ளார் .
மோதல் காரணம்
சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் சூர்யா கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு சில பாஜக தலைவர்களின் பெயர்களும் இதில் அடிபடுகிறது. நீ எப்படி பதவி வாங்குன என்று தெரியும் என்று கூறி, அதோடு பாஜக தலைவர் ஒருவரின் பெயரும் அடிபட்டு உள்ளது. அதேபோல் நீ அண்ணாமலைக்கிட்ட போ.. மோடி, அமித் ஷா, நட்டாகிட்ட கூட போ.. உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை தீர்த்து காட்டுவேன் என்று பேசி உள்ளார்.