அரசியலில் குதிக்கும் சிஎஸ்கே வீரர்.. ஆளுங்கட்சியில் இணைந்து புதிய இன்னிங்ஸ்? ஆஹா.. அங்கயா? ரைட்டு!
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது விளையாடிவரும் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, அரசியலில் குதிக்கப்போவதாகவும், பிரபலமான கட்சியில் இணையப்போவதாகவும் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம், அவரது பேச்சும், பதிவிட்ட ட்வீட்டும் தான்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான வீரர் அம்பதி ராயுடு. ஹைதராபாத்தைச் சேர்ந்த அம்பதி ராயுடு, ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியிலும் இடம்பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நல்ல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார்.
Great speech ..our chief minister@ysjagan garu.. everyone in the state has complete belief and trust in you sir.. https://t.co/gw4s1ek1LR
— Ambati Rayudu (@RayuduAmbati) April 19, 2023
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடியுள்ள அம்பத்தி ராயுடு தற்போது சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட்டில் பிஸியாக இருக்கும் அம்பதி ராயுடு, அரசியல் இன்னிங்ஸை தொடங்க தயாராவதாக கடந்த சில நாட்களாக ஆந்திராவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரை புகழ்ந்த ராயுடு : கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை பாராட்டினார். ஜெகன் பேசிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து'எங்கள் முதல்வர் ஜெகன் ஒரு அற்புதமான உரையை நிகழ்த்தினார். மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் உங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார் அம்பதி ராயுடு.
இதையொட்டித்தான், ஆந்திராவில் அம்பதி ராயுடுவின் அரசியல் பிரவேசம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அம்பதி ராயுடு, ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார் என்ற கோணத்தில் விவாதம் தொடங்கியது. அம்பதி ராயுடுவின் அரசியல் கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அரசியல் களம் : கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்களுக்கும் சமுதாயத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பதாக அம்பத்தி ராயுடு முன்னர் பேட்டிகளில் கூறியிருந்தார். தான் எப்போதும் மக்கள் மத்தியில் இருக்க விரும்புவதாக கூறினார். மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தால் அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசிப்பேன், அரசியலுக்கு வந்தால், நேர்மையாக பணியாற்றுவேன் எனக் கூறி இருந்தார்.

அம்பதி ராயுடுவின் அரசியல் ஆர்வம் காரணமாகவே, அவர் அரசியல் தொடர்பாக போடும் ட்வீட்டுகளும், அவரது நடவடிக்கைகளும் அரசியல் ரீதியாக விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன. இப்போதும், அவரது ட்வீட்டால் ஆந்திரா, தெலுங்கானா மீடியா விவாதங்களில் இடம்பிடித்துள்ளார் அம்பதி ராயுடு.
பிஆர்எஸ் கட்சியில்? : முன்னதாக, அம்பதி ராயுடு, சந்திர சேகர் ராவின் பிஆர்எஸ் கட்சியில் இணைவார் என்றும் ஒரு தகவல் கிளம்பியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டியின்போது சந்திரசேகர் ராவ், கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்யும்போது அம்பதி ராயுடு கையில் முத்தமிட்டார். மேலும், ராயுடு பிஆர்எஸ் கட்சி சார்பில் நடந்த கேசிஆர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கும் சென்றார். எனவே அவர் பிஆர்எஸ் கட்சியில் சேருவார் என்றும் கூறப்பட்டது.
தற்போது ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை பாராட்டியுள்ளதால், ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் சேரப்போவதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அம்பதி ராயுடுவின் நடவடிக்கைகள் அவர் வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடுவார் என்பதை உறுதி செய்திருந்தாலும், அவர் எந்தக் கட்சியில் சேரப்போகிறார் என்பதுதான் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications