பலமிழக்கும் உட்கட்சி தலைவர்கள்.. வந்து குவியும் பிற கட்சி நிர்வாகிகள்.. திமுகவுக்கு பலமா, பலவீனமா?
பிற கட்சியி இருந்து முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்து வருகிறார்கள்
Recommended Video
சென்னை: பிற கட்சிகளிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் திமுகவில் வந்து இணைந்து கொண்டிருப்பது அந்த கட்சிக்கு நல்லதா, கெட்டதா, பலமா, பலவீனமா என்பது பிடிபடவில்லை.
நிர்வாகிகளாக இருந்தாலும் சரி, தொண்டர்களாக இருந்தாலும் சரி.. கருத்து வேறுபாடு காரணமாக யார் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும், "எதுக்கு எதிரி.. தூக்கி உள்ளே இழுத்து போடு" என்பதுதான் கருணாநிதி ஸ்டைல்!
அதேசமயம் அதிமுகவின் சேகர்பாபு ஆகட்டும், தேமுதிகவில் இருந்து சென்ற பார்த்திபன் உள்ளிட்ட 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆகட்டும், அவர்களுக்கும் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தார் கருணாநிதி.

சீனியர்கள்
ஆனால் அப்போது திமுகவின் பலமான நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அசைக்க முடியாத இடத்தில் இருந்தனர். கருணாநிதிக்கு மறைவுக்கு பிறகு, திமுகவின் நிலைமை சற்று தடம் மாறி பயணிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்கள் உடல்நலக் கோளாறால் சிக்கி உள்ளனர்.

மாற்று கட்சி
அடுத்தகட்ட தலைவர்களான பொன்முடி, கேஎன் நேரு போன்றோர் பலமிக்க தலைவர்களாக இல்லாமல் உள்ளனர். பிரிந்து போனவர்களை கட்சிக்குள் கூட்டிவந்த முல்லைவேந்தன் உள்ளிட்டோர் எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை. இந்த சமயத்தில்தான், மாற்று கட்சியில் இருந்து சில முக்கியமானவர்கள் திமுக பக்கம் வந்து இணைந்துள்ளனர்.

செல்வாக்கு
குறிப்பாக, செந்தில்பாலாஜி, கலைராஜன், தங்க தமிழ்செல்வன் போன்றோர் திமுகவில் இணைந்துள்ளது எந்த அளவுக்கு கட்சிக்கு முக்கியத்துவமாக இருக்கும் என்று தெரியவில்லை. பிற கட்சியில் இருந்து வந்துள்ள இவர்கள் யாருமே சாதாரணமானவர்கள் இல்லை, அவரவர் தொகுதியில், மாவட்டத்தில் முன்னிலையிலும், செல்வாக்கிலும் இருந்தவர்கள். தொடர்ந்து பலமுறை வெற்றி பெற்ற ஜாம்பவான்கள். அதுவும், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்.

திமுக செல்வாக்கு?
இப்படிப்பட்டவர்களை திமுகவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள் என்றால், இவர்களின் மாவட்டங்களில் திமுக பெருமளவு முன்னிலையில் வர முடியாத நிலை உள்ளதே. அதனால்தான், மாவட்ட செயலாளர், அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளைத்தான் இவர்களுக்கு தர வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. இதற்கு காரணம், அவரவர் மாவட்டங்களில் திமுகவை வளர்க்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட பாஜக பாணி அரசியலாகும்.

பாஜக சித்தாந்தம்
நம்மிடம் பலம் இல்லையா.. பலமானவர்களை நம் பக்கம் இழுத்துப் போட்டால் நாம் பலமாகி விடுவோம் என்ற சிந்தாத்தம்தான் பாஜகவுடையது. அப்படித்தான் அது பல மாநிலங்களில் வென்றது. அந்த அடிப்படையைத்தான் தற்போது திமுகவும் கடைப்பிடிப்பதாக சொல்கிறார்கள்.

பலமா? பலவீனமா?
அப்படியென்றால், உள்ளூர் தலைவர்கள் என்ன ஆவார்கள்? இதுவரை கட்சிக்காக உழைத்தவர்கள் கதி என்னாகும்? கட்சியின் பிற மூத்த தலைவர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என தெரியவில்லை. மற்ற கட்சியில் இருந்து நிர்வாகிகளை இழுத்து அவர்களுக்கு பெரிய பெரிய பொறுப்புகளை தருவது, திமுகவின் பலம் என்று எடுத்து கொள்வதா, அல்லது பலவீனம் என்று எடுத்து கொள்வதா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications