தொகுதி மாறும் ‘டாப்’ புள்ளி? இந்த முறை ‘மலை’ சேஃப் இல்லையாமே.. என்ன.. வடக்கில் களமா? அப்போ சிறுத்தை?
சென்னை : திமுக எம்.பி ஆ.ராசா, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி மாற திட்டமிட்டு வருவதாக திமுக வட்டாரத்தில் பேச்சுகள் உலவி வருகின்றன. மேற்கில் இருந்து வடக்கிற்குத் தாவப் போகிறாராம் ஆ.ராசா.
ஆ.ராசாவுக்காக வடக்கில் ஒரு தொகுதியை இப்போதே ரிசர்வ் செய்கிறதாம் திமுக தலைமை. ஏற்கனவே அங்கு நின்ற கூட்டணி கட்சி தலைவரும், தொகுதியை விட்டுக்கொடுக்க ரெடியாம்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இப்போதே நீலகிரியில் பல்வேறு வகைகளிலும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், ஆ.ராசாவின் தொகுதி தாவல் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆ.ராசா எம்.பி
1996, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்று எம்.பியானவர் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. தனி தொகுதியாக இருந்த பெரம்பலூர், 2009 தொகுதி மறுசீரமைப்புக்கு பின் பொதுத் தொகுதியானதால் கொங்கு மண்டலத்தில் உள்ள நீலகிரி தனி தொகுதிக்கு இடம்மாறினார் ஆ.ராசா. 2009 முதல் நீலகிரி தொகுதியில் தான் போட்டியிட்டு வருகிறார் ஆ.ராசா. 2009ல் நீலகிரியில் வென்ற நிலையில், 2014ல் தோல்வியடைந்தார். மீண்டும் 2019 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பாஜக குறி
இந்நிலையில், ஆ.ராசா 2024 தேர்தலுக்கு தொகுதி மாற திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல்கள் உலவி வருகின்றன. நீலகிரி தொகுதியை பாஜக அல்டிமேட்டாக குறிவைத்துள்ளது. தற்போது மத்திய இணையமைச்சராக உள்ள எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். அதிமுகவும் அங்கு வலுவாக உள்ளது. ஏற்கனவே, 1998ல் பாஜக வென்ற தொகுதி, அதோடு கொங்கு மண்டல பலமும் சேர்கிறது என்பதால், மீண்டும் தட்டித் தூக்கிவிடலாம் எனக் கணக்குப் போடுகிறது பாஜக.

காய் நகர்த்தும் முருகன்
அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மக்களவைத் தொகுதி நீலகிரி. பாஜகவை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர். அவர் சார்ந்த அருந்ததியர் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அருந்ததியர் சங்கங்களை ஒன்றிணைத்து தேர்தல் வேலையை எல்.முருகன் தீவிரப்படுத்தி இருக்கிறாராம். இதனால் கள நிலவரம் முருகனுக்குச் சாதகமாகத் திரும்பி வருகிறதாம். மேலும், இந்துத்துவாவுக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடும் ஆ.ராசாவை தோற்கடிக்க பாஜக பல்வேறு பிரச்சார யுக்திகளையும் பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆ.ராசா அடுத்த குறி
இந்நிலையில் தான் திமுக எம்.பி ஆ.ராசா, நீலகிரியை தனக்கு சேஃப்டியான தொகுதியாக கருதவில்லை எனக் கூறப்படுகிறது. உளவுத்துறை தகவல்களும் ஆ.ராசாவின் கணிப்பை உறுதி செய்திருக்கின்றனவாம். அதனால், ஆ.ராசா வேறு தொகுதிக்கு இடம்பெயரக்கூடும் எனத் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆ.ராசாவின் அடுத்த குறி சிதம்பரம் தொகுதியாக இருக்கக்கூடும் என்கிறார்கள். ஆ.ராசா சார்ந்த ஆதிதிராவிடர் சமூகம் அதிகமுள்ள தொகுதி என்ற அடிப்படையில் சிதம்பரத்திற்கு ஆ.ராசா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போ திருமா?
சிதம்பரம் தொகுதியில் தற்போது எம்.பியாக இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், தனது தொகுதியை விட்டுத் தருவாரா என்ற கேள்விகளும் எழுகின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக'பானை' சின்னத்தில் களம் கண்ட திருமாவளவன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட வெறும் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். இதனால், திருமாவளவனுமே சிதம்பரம் தொகுதியை பெரிதாக நம்பவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆ.ராசாவுக்காக
திருமாவளவனை திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம் தொகுதியில் நிற்க வைக்க திமுக தரப்பு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. சிதம்பரம் போல பெரிய அளவில் பாமக ஓட்டுகள் திருமாவளவனின் வெற்றியை இந்த தொகுதிகளில் பாதிக்காது என்பது திமுக தலைமை திருமாவுக்கு கொடுத்திருக்கும் யோசனையாம். இதை அவரும் ஏற்கக்கூடும் என்கிறார்கள் விசிக வட்டாரத்தில். ஆக, சிதம்பரம் தொகுதி, ஆ.ராசாவின் வருகைக்காக இப்போதே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications