இந்த நேரம் பார்த்தா இப்படி.. முட்டு சந்தில் சிக்கிய பன்னீர்.. சல்லி சல்லியா போச்சே.. நெக்ஸ்ட் என்ன?
சென்னை : ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது வலுவாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், சசிகலாவோடு இணைய முயற்சித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தனது திட்டத்தை மாற்றிக்கொள்வாரா எனும் கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்த ஆறுமுகசாமி ஆணையம் இதுகுறித்த அறிக்கையை முதல்வரிடம் சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 4 பேரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சசிகலா மீது பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலாவின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமானவை என்பதால், தற்போதைய அரசியல் சூழலில் அவருடன் கைகோர்த்துச் செயல்படும் திட்டத்தை ஓபிஎஸ் மறு ஆய்வு செய்வார் எனக் கூறப்படுகிறது.

ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் தமிழக அரசு ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவர்கள், ஊழியர்கள் , ஜெயலலிதா இல்லத்தின் பணியாளர்கள், உதவியாளர்கள், சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோரை கடந்த 6 ஆண்டுகாலமாக பல்வேறு கட்டங்களாக விசாரித்தது. விசாரணையின் முடிவில் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக முதல்வரிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தது.

ஆஞ்சியோவை தடுத்தார் சசிகலா
ஆறுமுகசாமியின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை,. அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவிடாமல் சசிகலா தடுத்துள்ளார்.

ஜெ. சசி இடையே சுமுக உறவு இல்லை
சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. இந்த தகவலை இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

சசிகலா + 3 பேர்
2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம் என்று கூறியுள்ள நிலையில், சசிகலா, மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக கருதுவதாகக் கூறி அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.

சசிகலாவுக்கு சிக்கல்
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களால் சசிகலாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் உரிய விசாரணை நடத்த புதிதாக ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்கலாம். அல்லது, சிபிசிஐடி, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் வசம் இதுகுறித்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படலாம். ஆறுமுகசாமி ஆணையம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால், இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

சசிகலாவின் திட்டம்
தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவை மீட்டெடுத்து அதன் தலைமை பொறுப்பில் அமர வேண்டும் என்பதில் சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

சசிகலா + ஓபிஎஸ்
மேலும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுடன் கைகோர்த்துச் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் தர முயற்சித்து வருகிறார். இதற்காக சசிகலா தரப்பிடம், ஓபிஎஸ் தரப்பினர் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவுடன் இணைந்து, கட்சியைக் கைப்பற்றுவதற்கான திட்டத்தோடு, தனது அணியை பலப்படுத்தி வருகிறார் ஓபிஎஸ். இந்நிலையில், ஓபிஎஸ் திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டுள்ளது ஆறுமுகசாமி ஆணையத்தின் இந்த அறிக்கை.

ஓபிஎஸ் முடிவு மாறுமா?
ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா மீது ஆணையம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் எதிர்மறையான விளைவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. இப்போது சசிகலாவுடன் இணையும் திட்டத்தை ஓபிஎஸ் தீவிரப்படுத்தினால் அது அவருக்கும் எதிராக தொண்டர்களை திருப்பக்கூடும். இதனால், ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவோடு கைகோர்க்கும் முயற்சியை ஓபிஎஸ் கைவிடக்கூடும் எனக் கூறப்படுகிறது. சசிகலா இணைவு விஷயத்தை ஓபிஎஸ் மறுபரிசீலனை செய்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications