அடித்து பிடித்து வாங்கும் மக்கள்.. சர்ர்ரென அதிகரித்த டோலோ மாத்திரை விற்பனை - என்ன காரணம்?!
சென்னை: கொரோனா கேஸ்கள் உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோலோ மாத்திரை விற்பனை புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.
உலகமெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவின் தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பரவி வருகிறது. அதே நேரம், ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது.
ஒமிக்ரானால் தொற்று அதிகரித்து வருகிறது என்றாலும், அதன் பாதிப்பு பெரியளவில் இருக்காது என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில், டோலோ 650 மாத்திரை அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. அதிகம் விற்பனையாகும் மாத்திரையில் முதல் இடத்தில் இருக்கிறது டோலோ.

பாராசிட்டமால்
கொரோனா முதல் அலையின் போது, பாராசிட்டமால் மாத்திரைக்கு கடும் தட்டுப்பாடு இருந்தது. மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகள் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. அதேசமயம் பாராசிட்டமால் மாத்திரையும் விற்றுத் தீர்ந்தது. தட்டுப்பாடு ஏற்பட்டதும், பாராசிட்டமால் வாங்கினால், வாங்குபவரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

டோலோ
கொரோனா மூன்றாவது அலையில், டோலோ மாத்திரை அதிகமாக விற்கிறது. சாதாரண காய்ச்சல் தலைவலி, உடல்வலி உள்ளிட்டவற்றுக்கு டோலோ தீர்வாக இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்க மருந்துகடைகளில் அதிக விற்பனை ஆகிவருகிறது இந்த மாத்திரை. பலர் முண்டியடித்து டோலோ மாத்திரை வாங்கி வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் டோலோ மாத்திரை அதிகமாக விற்பனை ஆகியுள்ளது.

கோடிகளில் விற்பனை
தமிழ்நாட்டிலும் டோலோ விற்பனை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இணையத்தில் டோலோ 650 டேக் பெரிய அளவில் டிரெண்டானதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்தில் மட்டும் இதுவரை சுமார் 550 கோடி ரூபாய்க்கு மேல் டோலோ மாத்திரை விற்பனையாகி இருக்கிறது. இது மிகப்பெரிய அளவில் சந்தையாகி இருக்கிறது.

ஏன் டோலோ
சுகாதார ஆய்வு நிறுவன தரவுகளின்படி டோலோ மற்றும் கால்பால் ஆகியவை காய்ச்சலுக்காக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்து. மருத்துவர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன. சாதாரண காய்ச்சல் மற்றும் அது தொடர்பான பாதிப்புகளுக்கான மருந்தாகி விட்டதே டோலோ விற்பனைக்கு அதிக காரணம். மேலும் இதனால் பெரிய அளவில் பக்கவிளைவுகள் இருக்காது.

ட்ரெண்டிங்
ஓமிக்ரான் கேஸ்களால் பலருக்கு உடல் வலி ஏற்படுவதும் டோலோ விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். டோலோ விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. #Dolo650 என்ற ஹேஷ்டேக் மூலம் பலர் தங்கள் டோலோ மாத்திரை அனுபவங்களை பகிர்ந்து வந்தனர். கொரோனா இன்னும் முடியாத சூழழில் டோலோ மாத்திரையின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்றே தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications