எனக்கு தெரியும்.. இப்படி சத்தம் போட்டு மிரட்டாதீங்க! வேல்முருகனை கண்டித்த அப்பாவு.. அவையில் பரபரப்பு
சென்னை: அவையில் பெரிய சத்தம் போடக்கூடாது, அவையில் உட்கார்ந்து மிரட்டல் விடுக்கும்படி பேச கூடாது என்று எம்எல்ஏ வேல்முருகனை சபாநாயகர் அப்பாவு எச்சரித்தார்.
இன்று தமிழ்நாடு சட்டசபையில் துணை கேள்விக்கு அமைச்சர்கள் சார்பாக பதில் அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஒவ்வொரு எம்எல்ஏக்களாக எழுந்து கேள்வி கேட்க அனுமதித்தார். அப்போது சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விக்கு அனுமதி வழங்கக்கோரி உறுப்பினர் வேல்முருகன் எழுந்து பேச வாய்ப்பு மறுத்தபோதும், அவர் தொடர்ந்து பேசிய நிலையில், "இது போன்று அவையில் பேசக்கூடாது, பெரிய சத்தம் போடக்கூடாது" என வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.

இதனால் அவையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அப்பாவு - எம்எல்ஏ வேல்முருகன் இடையே நடந்த விவாதம் பின்வருமாறு
சபாநாயகர் அப்பாவு: போக்குவரத்து துறை அமைச்சர் பேசுங்கள்
குறுக்கிட்ட வேல்முருகன்: நீண்ட நாட்களாக துணை கேள்வி கேட்பது பற்றி கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.. பேச விடவில்லையே..
சபாநாயகர் அப்பாவு : நீங்கள் முன் வரிசையில் தானே இருக்கிறீர்கள்.. பேச வைக்கிறேன்.
வேல்முருகன்: முன் வரிசையில் இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள்.. ஆனால் பேச விடவில்லையே..
சபாநாயகர் அப்பாவு: துணை கேள்வி எல்லாம் எப்போ கேட்க வேண்டும்.. யாருக்கு நேரம் கொடுக்கணும்னு என்று எனக்கு தெரியும்.. உட்காருங்கள்
வேல்முருகன்: உங்களுக்கு தெரியும் என்றால்.. எங்களுக்கும்தான் தெரியும்

சபாநாயகர் அப்பாவு: சத்தத்தை எல்லாம் ரைஸ் பண்ண கூடாது வேல்முருகன்.. அதெல்லாம் இங்கே செய்ய கூடாது.. உட்கார்ந்து கொண்டு மிரட்டல் எல்லாம் விடக் கூடாது, என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில் , அமைச்சர் பேசும் முன் நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். உறுப்பினர் வேல்முருகன் இதற்கு முன் அவையில் பேசி உள்ளார். கடந்த 24, 28, 30, 31ம் தேதி ஆகிய நான்கு நாட்களில் பேசி இருக்கிறார். அப்போதெல்லாம் அவர் துணை கேள்வி கேட்க நான் அனுமதி கொடுத்து இருக்கிறேன்.
துணை கேள்வி கேட்பது மட்டுமின்றி அவர் முன் வரிசையில் இருக்கிறார் என்பதால் பல முக்கியமான விஷயங்களில் அவரை பேச அனுமதி அளித்து இருக்கிறேன். அதோடு அவர் பேச பல முறை நீண்ட நேரம் அனுமதித்து உள்ளேன். தினம் தினம் துணை கேள்வி கொடுக்க வாய்ப்பு இல்லை. பலர் இங்கே சில கேள்விகளை மட்டுமே கேட்டுள்ளனர். சிலர் கேள்விகளையே கேட்கவில்லை.
அவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதுதான் முக்கியம். மற்றபடி கட்சி ரீதியாகவோ, வேறு காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்படுவது இல்லை. இதை முன் வைத்து கேள்வி நேரத்தில் பிரச்சனை செய்ய கூடாது. நீங்கள் சொன்ன விஷயத்தையே 20 பேர் துணை கேள்விகளாக கேட்டுள்ளனர். என்னுடன் நீங்கள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எனக்கும் தெரியும் யாருக்கு எப்படி நேரம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அவையில் பெரிய சத்தம் எல்லாம் போட வேண்டாம். யாருக்கு எந்த ஆர்டரில் நேரம் கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதனால் நீங்கள் சத்தம் போட வேண்டாம் என்று சபாநாயகர் அப்பாவு அவையில் கோபமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications