"நகைச்சுவைக்காக மட்டுமே பெண்களை பயன்படுத்த வேண்டாம்" கலைஞர்களுக்கு கனிமொழி சொன்ன அறிவுரை!
சென்னை: நகைச்சுவைக்காக மட்டும் பெண்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், பெரியாரை படிக்கும்படியும் கலைஞர்களிடத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவுறுத்தினார். அதேபோல் கடந்த ஆண்டுகளில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி தனியார் அமைப்புகள் மூலம் நடத்தப்பட்டதாகவும், இம்முறை அரசே ஏற்று நடத்தியதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா மீண்டும் இந்த ஆண்டு புத்துணர்வோடு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் தமிழர் நாகரிகம், பண்பாடு மற்றும் நாட்டுப்புற கலைகளை அடையாளப்படுத்தக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது.

பாரம்பரிய கலைகள்
கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கும்பாட்டம், தெருக்கூத்து என தமிழர்களின் பாரம்பரிய கலைகளை 600க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தினந்தோறும் மாலை நேரங்களில் அரங்கேற்றினார்கள். திமுக எம்பி கனிமொழி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை சென்னை மக்கள் அதிக ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சென்னை சங்கமம்
அதேபோல் தீவுத்திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பால பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 18 இடங்களில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற்றது.

இறுதிநாள் நிகழ்ச்சி
இந்த நிலையில் தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் நடந்த இறுதி நாள் நிகழ்வில் கனிமொழி பங்கேற்றார். இந்த விழாவில் நெல்லையை சேர்ந்த கலைமாமணி வேலவன் சங்கீதா குழுவினர் வில்லுப்பாட்டு இசைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறுகையில், கடந்த ஆண்டுகளில் அரசின் உதவியுடன் தனியார் அமைப்புகள் மூலமாக சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கலைஞர்கள்
தற்போது தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தியது. கலைஞர்களின் ஊதியமும் ரூ.5 ஆயிரம் அதிகரித்து வழங்கப்பட்டது. தொடர்ந்து அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் இந்த கலைஞர்கள் தான் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சியின் போது, பெண்கள் பற்றி இழிவான கருத்துகளை பேசுவது பற்றிய கேள்விக்கு, கலைஞர்கள் அனைவரையும் கண்காணித்து அவர்களுக்கு என்று தனியாக சென்சார் போல் வைக்க முடியாது.

கனிமொழி அறிவுரை
ஆனால் எதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லும் போது, மாற்றிக் கொள்வார்கள். அதிலும் ஒரு ஜனநாயகம் இருக்கிறது. அதேபோல் கலைஞர்களுக்கு வெறும் நகைச்சுவைக்காக மட்டும் பெண்களை பயன்படுத்த வேண்டாம் எனவும், பெரியாரை படிக்கும்படியும் கலைஞர்களிடத்தில் கனிமொழி அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications