ஈரோடு கிழக்கு.. இதைத்தாங்க எதிர்பார்த்தோம்.. "நோ விமர்சனம்.." உதயநிதி ஸ்டாலின் கூல் பேட்டி
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெறுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அதேபோல், இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

முன்னிலையில் காங்கிரஸ்
2வது சுற்று முடிவில் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோட்டில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டில், அவருக்கு லட்டு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாறு படைத்த ஈவிகேஎஸ் இளங்கோவன்
இது போன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வெற்றிபெற்றவர்களின் வாக்கு வித்தியாசத்தை முதல் சில சுற்றுகளிலேயே ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து, வரலாறு படைத்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஈவிகேஎஸ் இளங்கோவன், நிச்சயமாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

விமர்சிக்க விரும்பவில்லை
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெறுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். தோல்வி அடைந்தவர்கள் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications