அமெரிக்காவின் ஒரே ஒரு மூவ்.. உலகம் முழுக்க 1.4 கோடி பேர் சாகப்போகிறார்கள்.. வல்லுநர் குழு வார்னிங்
சென்னை: வெளிநாட்டு நிதியுதவியை நிறுத்துவதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு உலகம் முழுக்க பலரின் மரணத்திற்கு காரணமாக மாறிவிடும் என்று ஐநா எச்சரித்து உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் 1.4 கோடிக்கும் அதிகமான மரணங்களுக்கு இது வழிவகுக்கும் என்று தி லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 20 வருடங்களில் USAID நிதியுதவி அளித்த திட்டங்கள் மூலம் 9.1 கோடிக்கும் அதிகமான இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 கோடி குழந்தைகள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த நிதி நிறுத்தப்பட்டால் 2030-ம் ஆண்டுக்குள் 1.4 கோடிக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படும். இதில் 5 வயதுக்கு குறைவான 45 லட்சம் குழந்தைகள் இறக்க வாய்ப்பு உள்ளது என்று லான்செட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக எய்ட்ஸ் நோயால் பல மில்லியன் மக்கள் பலியாக வாய்ப்புள்ளதாக ஐ.நா.வின் நோய்க்கான திட்டக்குழு எச்சரித்து உள்ளது. எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளையின் (amfAR) ஆய்வின்படி, அமெரிக்காவின் இந்த நிதி மூலம் 20 மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 270,000 பேர் இதன் மூலம் பணியமர்த்தப்பட்டு எய்ட்ஸ் நோய்க்கு எதிராக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இப்போது அமெரிக்கா இந்த நிதியை நிறுத்தி உள்ளது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 6.3 மில்லியன் பேர் எய்ட்ஸ் காரணமாக பலியாக வாய்ப்புகள் உள்ளன. அதாவது 63 லட்சம் பேர் சாகப்போகிறார்கள். 87 லட்சம் பேர் நேரடியாக எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன, என்று ஐநா எச்சரித்து உள்ளது.
அமெரிக்கா நிதி உதவி
அமெரிக்க பொதுவாக உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும். பல திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைப்பார்கள்.
இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்து உள்ளார். இதனால் உலக எதற்கும் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அமெரிக்க நிதியில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவன செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என்று எல்லாம் முடக்கப்பட்டு உள்ளன. USAID எனப்படும் இந்த நிதி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியாவிற்கான USAID நிதி:
USAID இந்தியாவில் பணிபுரியும் அதன் ஒப்பந்த திட்டங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. USAID இந்தியாவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல பணிகளை செய்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், USAID மூலம் இந்தியா $140 மில்லியனைப் பெற உள்ளது. கடந்த ஆண்டு இதே தொகையை பெற்றது. இதை எல்லாம் இந்தியா மொத்தமாக இழக்கும். அதாவது கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை இந்தியா இழக்கும்.
2023-24 நிதியாண்டில், USAID ஒதுக்கீடு மூலம் இந்தியாவின் அரசு மற்றும் சிவில் சமூக திட்டங்களுக்கு $6.8 மில்லியன், சுகாதாரத்திற்காக சுமார் $55 மில்லியன்; சுற்றுச்சூழலுக்கு $18 மில்லியன், மற்றும் சமூக உள்கட்டமைப்புக்கு $7.8 மில்லியன் என ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு அப்படியே முடக்கப்பட்டது. பெரும்பாலும் அமெரிக்காவின் நிதி உதவி இந்தியாவில் சுகாதார திட்டங்களுக்கே பயன்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications