“லேடி சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்..” நடிகை நயன்தாரா வேண்டுகோள்
சென்னை: தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பர் நயன்தாரா. 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றிகரமாக உள்ள நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வந்தனர். இதற்கிடையே தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக உள்ளவர்களை அவர்களின் ரசிகர்கள் புனை பெயரை வைத்தே அழைப்பார்கள். சூப்பர் ஸ்டார், தளபதி எனப் பல நடிகர்களை இப்படி தான் அழைப்பார்கள்.

நயன்தாரா
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இதுபோல புனை பெயர்கள் பெரிதாக இருந்தது இல்லை. ஆனால், அதை மாற்றியது நயன்தாரா. 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வந்தனர். இதற்கிடையே தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என நயன்தாரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது.. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.
லேடி சூப்பர்ஸ்டார்
நீங்கள் பலரும் என்னை "லேடி சூப்பர்ஸ்டார்" என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை "நயன்தாரா" என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது.. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும்... பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலை தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும் .
வேண்டுகோள்
நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதைக் கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம். அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது - அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்!" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகர்கள் கமல் மற்றும் அஜித் ஆகியோரும் கூட எந்தவொரு புனை பெயரையும் கொண்டு அழைக்க வேண்டாம் என அறிவித்திருந்தனர்.. தங்கள் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டு தங்களை அழைக்குமாறு இருவரும் அறிவித்திருந்தனர். இப்போது அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.
நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா ஹரி இயக்கத்தில் சரத்குமார் உடன் "அய்யா" படத்தில் அறிமுகமானார். இரண்டாவது படத்திலேயே சந்திரமுகியில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து பில்லா, ராஜா ராணி, தனி ஒருவன், எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இடையில் இரண்டு முறை தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருந்தார். இருப்பினும், இரு முறையும் கம்பேக் கொடுக்கும் போது அவரது மார்கெட் உயரவே செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications