7ம் வகுப்பு மாணவிக்கு ஸ்கூலில் வராத தாளாத தலைவலி.. வீட்டுக்கு வந்தா மட்டும் இருக்கு.. காரணம் என்ன?
சென்னை: குடித்துவிட்டு தாயை அடிக்கும் தந்தை, தினந்தோறும் ஓயாத சண்டை நடப்பதால் அதை பார்க்கும் குழந்தைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது: கிளினிக்கில் ஏழாம் வகுப்பு பயிலும் மகளை அவரது தாயார் அழைத்து வந்திருந்தார். மகளுக்கு தொடர்ந்து தினமும் தலைவலி ஏற்படுவதே என்னை சந்திக்க வந்த முக்கிய காரணம். கண் பார்வை பரிசோதனைகளை கண் மருத்துவமனையில் பரிசோதித்து நார்மல் என்று தெரிந்தாகி விட்டது.
ஸ்ரீநகரில் பனிமழை -ராகுல் யாத்திரை நிறைவு- பிரியங்கா, திருச்சி சிவா, உமர் அப்துல்லா பங்கேற்பு!
தலைவலி
"தலைவலி அடிக்கடி வருதாமா" "ஆமா சார்". "வெடீர் வெடீர்னு தலையே வெடிக்கிற மாதிரி தலைவலி பலமா இருக்கா?" "ஆமா சார்" "குமட்டல் வாந்தி வருதா?" "ஆமா சார்.. வாந்தி எடுத்தா கொஞ்சம் தலைவலி விட்ட மாதிரி இருக்கு" அவரின் தாய் "பாராசிட்டமால் மாத்திரை அதிகமா போடுறா சார்" "இந்த தலைவலி எப்பலாம் மா வருது?" "ஸ்கூல விட்டு வீட்டுக்கு வந்த உடனே கொஞ்ச நேரத்துல வந்துடுது சார்" "ஸ்கூல்ல இல்லையா?" "ஸ்கூல்ல தலைவலி இல்ல சார்"
கணவர் குடிப்பழக்கம்
அவரது தாயிடம் " மா .. உங்க கணவர் தண்ணி அடிக்காறாரா?" "ஆமா சார்" "டெய்லியுமா?" "ஆமா சார்.. டெய்லியும் அடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவார்" மகளிடம் "வீட்டுக்கு வந்து அம்மா கூட சண்டை போடுறாரா?" "ஆமாம் சார்.. அடிக்கிறாரு சார்" "உன்னை அடிப்பாரா?" "ஆமா சார் .. தடுக்க போனா என்னையும் அடிப்பாரு சார்" பொதுவாக இது போன்ற தொடர் தலைவலிகள் பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதைக் காண முடிகிறது.
மைக்ரேன் தலைவலி
ஒற்றைத் தலைவலி எனும் மைக்ரேன் பெண்களுக்கு வருவது, இண்செக்யூரிட்டி எனும் பாதுகாப்பின்மை உணர்வால் ஏற்படுவதை எனது சிறு அனுபவத்தில் கண்டிருக்கிறேன். கணவர் வெளிநாட்டில் இருந்து இங்கு தனியாக குடும்பத்தை நடத்தும் மகளிர், கணவர் குடிகாரராக இருந்து தினசரி குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் மகளிர் , கணவரை இளம் வயதில் இழந்து கைம்பெண்களாக இருக்கும் மகளிருக்கு அதிகம் வருகிறது.
மன பதற்றம்
அதீத மனப்பதற்றம், தனிமை உணர்வு, பாதுகாப்பின்மை குறித்த உணர்வு, பணிச்சுமை போன்றவை இது போன்ற தொடர் தலைவலிக்கு காரணமாக அமைகின்றன. இந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு அவரது தாயும் தந்தையும் தினசரி இரவில் சண்டை போட்டுக் கொள்வது குறிப்பாக தந்தை மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது அடிப்பது என்று இருப்பதால் இந்தப் பெண் வீட்டுக்கு வந்தாலே பதட்டம் அடைந்து அதனால் தலைவலிக்கு உள்ளாகிறார் என்பதை அறிந்து கொண்டு சிறிய கவுன்சிலிங் கொடுத்து கூடவே சிகிச்சையும் செய்து அனுப்பினேன்.
சின்ன கவுன்சிலிங்
அடுத்த முறை தந்தையையும் அழைத்து வரக் கூறியிருக்கிறேன். அவருக்கும் சின்ன கவுன்சிலிங் கொடுத்தால் நிலைமை இன்னும் கொஞ்சம் சரியாகக் கூடும். குடும்ப வன்முறை, தாய் - தந்தை உறவு விரிசல், தாய் தந்தைக்கு இடையே சண்டைகள், தந்தை போதை வஸ்துவுக்கு அடிமையாக இருப்பது குறிப்பாக தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து அடாவடி செய்வது, நிச்சயம் பிள்ளைகளின் மனநிலையை பாதிக்கும் அவர்களின் உளவியலை பாதிக்கும்.
ஓடிறலாம்னு தோணும்
அந்தப் பெண்ணிடம் நான் கேட்டேன் "இப்படி தொடர்ந்து அப்பா அம்மா சண்டை போட்டுக்கிறதுனால உனக்கு என்ன மா தோணுது?"
" வீட்ட விட்டு ஓடிறலாம்னு தோணும் சார் சில நேரம்" என்று கூறினார். பிள்ளைகளுக்கு நல்ல அமைதியான இல்லச் சூழலை ஏற்படுத்தித் தரும் கடமை பெற்றோராகிய நமக்கு இருக்கிறது சொந்தங்களே. இவ்வாறு தனது பதிவில் டாக்டர் பரூர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.