இரும்பை அடித்து சூடாக்கி வளைத்து.. ராமதாஸ் என்ன சொல்கிறார்.. யாரை சொல்கிறார்?
பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்டுக்கு அர்த்தம் புரியவில்லை.
சென்னை: டாக்டர் ராமதாஸ்-க்கு இப்பவெல்லாம் என்ன ஆச்சோ தெரியவில்லை... வெறும் பழமொழிகள்தான்... அதுவும் வெளிநாட்டுக்காரர்களின் பழமொழிகளைதான் உதிர்த்து வருகிறார்.
கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகிறது. அதற்காக எல்லா கட்சிகளும் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள். இதற்கான கூட்டணிகளை அமைக்க தூது வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
பெரும்பாலும் எல்லா கட்சிகளுமே ஓரளவுக்கு வியூகம் அமைத்து வரும் நிலையில், பாமக இன்னும் வாயை திறக்காமல் உள்ளது. இதுவரை ஒரு சின்ன தகவல்கூட வெளியே கசிந்துவிடாமல் கவனமாகவும் கையாண்டு வருகிறது.
அறிகுறியே காணோம்
வழக்கமாக மாறி மாறி கூட்டணி வைப்பதில் முதன்மையானவர் டாக்டர் ராமதாஸ்தான். அதனால் இந்த முறை யாருடன் கூட்டணி என்பது 3 மாத காலமாகவே ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.
நிலைமை மோசம்
சரி, தங்களது நிலைப்பாடு குறித்து ட்விட்டர்களில் பதிவுகள் மூலம் நிறுவன தலைவர் கொஞ்சமாவது வெளிப்படுத்துவார் என்று பார்த்தால், அங்கே நிலைமை இன்னும் மோசம்!! ஏற்கனவே கூட்டணி சம்பந்தமாக குழம்பியுள்ள மக்கள் ராமதாஸ் போடும் ட்வீட்களை பார்த்து தெறித்து ஓடுகிறார்கள். ட்வீட்கள் புரிந்து கொண்டு ஓடினாலும் பரவாயில்லை, எதுவும் புரியாமல் குழம்பி போய் ஓடுகிறார்கள்.
பேரிக்காய் ட்வீட்
கொஞ்ச நாளைக்கு முன்பு ராமதாஸ் ஒரு ட்வீட் போட்டிருந்தார். "பேரிக்காய் பழுக்கும் வரை காத்திருக்க மனமில்லாத ஒருவன் தினமும் மரத்தையே பார்த்துகொண்டிருந்தான்.அவன் கட்டாயப்படுத்தி பழுக்க வைக்க முயன்றால் பழம், மரம் இரண்டும் நாசமாகி விடும்.பொறுமையுடன் காத்திருந்தால் பழுத்த பழம் அவனது மடியில் விழும்! - ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க முன்னாள் அதிபர்." என்று பதிவிட்டார்.
யாரை சொல்கிறார்
பொறுமையுடன் காத்திருப்பவர் யார், பழம் என்று யாரை சொல்கிறார் என்றெல்லாம் இதுவரை இந்த பேரிக்காய் ட்வீட்டுக்கு விடை தெரியவில்லை. இந்த நிலையில், இன்று திரும்பவும் ஒரு வெளிநாட்டு பழமொழியை பதிவிட்டுள்ளார் ராமதாஸ்.
|
இரும்பு கம்பி
அதில், இரும்பு சூடான பிறகு அதை அடித்து வளைக்கலாம் என்று காத்திருக்காதே; மாறாக, இரும்பை அடித்து அடித்து சூடாக்கி வளைக்க முயற்சி செய்!,- வில்லியம் பட்லர் யீட்ஸ் என்று கூறியுள்ளார்.
காத்திருப்பவர்
இந்த ட்வீட்டிலும் காத்திருப்பவர் யார், இரும்பு யார், என்று ராமதாஸ் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆக மொத்தம் இரண்டு ட்வீட்டையும் கூட்டி கழித்து பார்த்தால் நாமே குத்து மதிப்பாக ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது. இரண்டு ட்வீட்டிலும் பேரிக்காய், இரும்பு என்று பொருட்கள்தான் மாறுபடுகின்றனவே தவிர "காத்திருப்பவர்" என்பது மட்டும் அப்படியே பழமொழிகளில் தொடர்ந்து வருகிறது.
யாருக்காக காத்திருப்பு?
அப்படி என்றால் "காத்திருப்பது" ராமதாஸ்தானா? பாமகதானா? என தெரியவில்லை. ஒருவேளை காத்திருப்பது ராமதாஸ்தான் என்றால், யாருக்காக காத்திருக்கிறார்? எதற்காக காத்திருக்கிறார்? இதெல்லாம் அடுத்த வெளிநாட்டுக்காரரின் பழமொழியிலாவது ஏதாவது நமக்கு விளங்குகிறதா என்று பார்ப்போம்.