உ.பி.க்கள் கூட செல்பி எடுக்க கூச்சப்பட்ட திமுக எம்.பி..! காரணம் என்ன..?
சென்னை: தர்மபுரி மக்களவை தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடி எம்.பி.ஆகியுள்ளார் மருத்துவர் செந்தில்குமார்.
ரேடியாலஜி முடித்துள்ள இவர் ஸ்கேன் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணியை தோற்கடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆசி பெறுவதற்காக மாவட்டச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்திருந்தார். அப்போது அவரை கண்ட திமுக உ.பி.க்கள் சிலர் செந்தில்குமாரிடம் கைகுலுக்கி வாழ்த்துச்சொன்னதுடன் ஆர்வமுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
இவருடன் நின்ற மாவட்டச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் எம்.எல்.ஏ ஆகியோரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் மாவட்டச்செயலாளர் தடங்கம் சுப்பிரமணியின் முகத்தை கவனித்த எம்.பி.செந்தில்குமார், தர்மசங்கடத்தில் நெளிந்தார்.
மேலும் கூட இருப்பவர்கள் தன்னை தவறாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக தன்னிடம் பேச வந்தவர்களிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. இந்த காட்சியால் அண்ணா அறிவாலயமே கலகலப்பாகிப் போனது.
மத்தியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயம் செந்தில்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். ஆனால் எல்லாம் நிராசையாகிப் போய் விட்டதாக தர்மபுரி திமுகவினர் பேசிக் கொள்கின்றனர்.