வரைவு வாக்காளர் பட்டியலில்.. பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்? தெரிஞ்சுக்கோங்க!
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் (SIR) தொடங்கப்பட்டன. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. மாவட்ட வாரியாக இந்த பட்டியல் வெளியாகியுள்ளது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், மதுரை, நெல்லை என மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் பலரின் பெயர் விடுப்பட்டிருக்கிறது. எனவே விடுபட்ட பெயர்களை சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது கீழே விளக்கப்பட்டிருக்கிறது.

முதலில் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in எனும் வெப்சைட்டிலும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும், தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை என்டர் செய்து செக் செய்து கொள்ளலாம். நீக்கப்பட்டவர்களின் விவரம் மற்றும் அதற்கான காரணங்களை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். புதியதாக சேர விரும்பும் வாக்காளர்களும் இதே போல, படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்ப்பு படிவங்களை சமர்ப்பிக்கலாம்.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் படி, ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தலா 50 படிவம்-6 இருக்கும். அவர்களிடம் இருந்து இந்த படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், டிசம்பர் 19ஆம் தேதி முதல், அதாவது இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயரை சேர்த்தல் மட்டும் இல்லாது, ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்த மறுப்புகளையும் தெரிவிக்க முடியும்.
பட்டியலில் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய அல்லது தொகுதி மாற்றம் செய்ய படிவம்-8ஐ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கப்படும் புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். அதிலும் பெயர் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.












Click it and Unblock the Notifications