கொள்கையை காப்பாற்ற எதையும் இழக்கலாம்.. பதவியை காப்பாற்ற எதையும் செய்யக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கொள்கையைக் காப்பாற்ற எதையும் செய்யலாம்; எதையும் இழக்கலாம்; ஆனால் பதவியை காப்பாற்ற எதையும் செய்யக் கூடாது என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிடர் இயக்கத்தின் தத்துவமேதையாக திகழ்ந்த போற்றப்படுகிற டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நூல்களை வெளியிட்டார். இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஈரோடு தமிழன்பன், டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திராவிட இயக்கம் எது?
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிடர் இயக்கம் என்றாலே பேச்சாளர் இயக்கம். எழுத்தாளர்கள் இயக்கம். கலைஞர்கள் இயக்கம். படைப்பாளர்களின் இயக்கம். இது ஒரு அறிவு இயக்கம். இந்த அறிவு இயக்கத்தின் ஆற்றல்மிக்க ஆளுமைகளில் ஒருவர் டிகே சீனிவாசன். திமுகவின் படைப்பாளர்கள் கற்பனைகளாக மட்டுமல்ல கொள்கைகளை, லட்சியத்தை விளக்கக் கூடிய படைப்புகளை தந்தனர். இலக்கிய, கொள்கை தரம் வாய்ந்தவையாக இருந்தன.

இளைஞரணிக்கு கட்டளை
திமுகவின் இளைஞரணி சார்பாக 234 சட்டசபை தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அது முடிந்துவிடவில்லை. அந்தப் பணி தொடர வேண்டும். இது என் வேண்டுகோள் அல்ல.. கட்டளை. இந்த பாசறை கூட்டங்களில் பங்கேற்றவர்கள் நூல்களை தேடி படியுங்கள்.

கொள்கை, கட்சி
கொள்கை இருந்தால்தான் கட்சி. கட்சி இருந்தால்தான் ஆட்சி என்பதில் எப்போதும் நான் உறுதியாக இருப்பவன். கொள்கையைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யலாம்; எதையும் இழக்கலாம். ஆனால் பதவியைக் காப்பாற்றுவதற்காக எதனையும் செய்துவிட முடியாது. இத்தகைய கொள்கை உரத்தை நமக்கு தந்தவர்கள் டிகே சீனிவாசன் போன்றவர்கள்.

தமிழ்நாடு எனும் கட்டிடம்
கள்ளி காளான்கள் படர்ந்து கட்டாந்தரையாக இருந்த தமிழகத்தை ஒழுங்குபடுத்தி உயர்த்தி தந்தவர் தந்தை பெரியார். அந்த நிலத்தில் எப்படிப்பட்ட கட்டிடம் அமைய வேண்டும் என திட்டமிட்டவர் அண்ணா. திட்டமிட்ட அந்த கட்டிடத்தைக் கட்டி முடித்தவர் கருணாநிதி என எழுதியவர் டிகே சீனிவாசன். தமிழ்நாடு என்ற கட்டிடத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications