திராவிடம் Vs தமிழ்த் தேசியம்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு? : சீமானின் ஆசான் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த் தேசியமும் திராவிடமும் எந்தவகையில் வேறுபடுகிறது என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அது குறித்த விளக்கத்தைச் சீமானின் அரசியல் ஆசான் பெ.மணியரசன் சில ஆதாரங்களை முன்வைத்து விளக்கம் அளித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கையை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'அது கொள்கை இல்லை, கூமுட்டை. அதுவும் அழுகிய கூமுட்டை. திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா? அதைப் பற்றி விஜய் என்னைப் போல விளக்கம் அளிப்பாரா? நான் ஏசி அறையிலிருந்து அரசியலுக்கு வந்தவன் இல்லை. சிறையிலிருந்து அரசியலுக்கு வந்தவன்” என்று ரைமிங்காக பஞ்ச் டயலாக் பேசி இருக்கிறார்.

seeman vijay

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது சீமான் இந்தக் கருத்துகளை முன்வைத்திருந்தார். தவெக மாநாடு முடிந்த உடனேயே, 'திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றல்ல. ஒன்று சாம்பார் என்று சொல்ல வேண்டும். அல்லது கருவாட்டுக் குழம்பு என்று சொல்ல வேண்டும். கருவாட்டு சாம்பார் எனச் சொல்லக் கூடாது’ என்று நகைச்சுவையாக தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

தவெக மாநாட்டுக்கு முன்புவரை விஜய் மீது ஒரு மென்னையான போக்கைக் கடைப்பிடித்து வந்த சீமான், இப்போது விஜய் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்த தொடங்கி இருக்கிறார். தங்களின் கொள்கை எதிரி என்று சொல்லும் அளவுக்கு அவர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வாக்குகளையே விஜய் அதிகம் பிரிப்பார் என்றும் அது சீமானின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் சிலர் கருத்துகளை முன்வைத்துப் பேசத் தொடங்கிய பிறகு சீமானிடம் இந்த மாற்றம் உருவாகி இருப்பதைக் கவனிக்க முடிகிறது. உண்மையில் திராவிடம் என்றால் என்ன? அது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதா? அது பற்றி சீமானின் அரசியல் ஆசான் பெ.மணியரசன் ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

அவர், “நம் சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் தமிழ்நாடு என்று சொல் இருக்கிறது. புறநானூறு தமிழகம் என்று சொல்கிறது. சிலப்பதிகாரத்தில்கூட தமிழ்நாடு என்று வார்த்தை இருக்கிறது. ஆக, நமது பண்டைய தமிழ் இலக்கியங்கள் பல தமிழ்நாடு என்ற சொல் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஒரு மூலக் கூறுகள்.

ஆனால், தமிழ்த் தேசியம் என்பதற்குச் சரியான வடிவம் பிற்காலத்தில்தான் கொடுக்கப்பட்டது. மறைமலையடிகள் 1916 ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கம் என்பதை தொடங்கினார். அதுதான் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படையாக அமைந்தது. அவர்தான் பிறமொழிகளைக் கலக்காமல் தமிழைப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தார். தமிழ் முறைப்படி திருமணம் உள்ளிட்ட சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும் அதற்கு தகுதி வாய்ந்த தமிழர்கள் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆக, தமிழ்த் தேசிய அரசியலுக்கு மறைமலையடிகள் தான் முன்னோடி.

அதன்பின்னர் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதியாக எழுந்தது. 1930 காலகட்டத்தில் தமிழறிஞர்கள் கூடி மொழி உரிமைக்காகப் போராடினர். அப்போதுதான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதலாக ஒடிசா மக்கள்தான் மொழிவழியாக தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் எனக் கேட்டுப் போராடினார்கள். 1936இல் அந்த மக்கள் தங்களுக்கான தனி மாநிலத்தைப் பெற்றார்கள்.

அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்திருந்தாலும் அந்தக் கட்சி தமிழ்த் தேசியத்தைத்தான் பேசியது. ம.பொ.சி மற்றும் ஆதித்தனார் போன்றவர்கள் தமிழ்த் தேசியத்தைத் துல்லியமாக வரையறை செய்தனர். பின்னர் பெருஞ்சித்தரனார், பாவாணர் எனப் பலர் அதை வளர்த்தார்கள். இன்றைக்குத் தமிழ்த் தேசியம் என்பது மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. இதைக் குறுக்கீடு செய்வதைப் போன்று திராவிடத்தை திணிப்பது தவறானது.

முற்போக்கு பேசுபவர்கள் பிற்போக்கு கருத்தைக் கொண்டுள்ளவர்கள் அல்லது கடவுளை ஏற்பவர்கள் இல்லை எனில் நிராகரிப்பவர்கள் என அனைவரையும் உள்ளடக்கியதுதான் தமிழ்த் தேசியம். இது அனைவரின் கருத்தையும் ஏற்கிறது. அதைத்தான் இன்றைய இளைஞர்கள் அதிகம் ஏற்க தொடங்கி இருக்கிறார்கள்” என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+