மழை வேண்டி யாகங்கள் நடத்தப்படுவது அதிமுக சார்பில் தான்.. அரசு செலவில் அல்ல.. ஓபிஎஸ் பேட்டி
சென்னை: வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு தேவைளான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக, துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பருவ மழை பொய்த்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள், ஆறுகள் குளங்கள், ஏரிகள், குட்டைகள் என அனைத்துமே நீரின்றி பாளம் பாளமாக வெடித்து காணப்படுகின்றன.
நீர் நிலைகள் வறண்டதால் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டதால், தமிழகத்தில் சுமார் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 5 அடி வரை சரிந்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உச்சகட்ட வற்சியின் பிடியில் சிக்கியுள்ள தலைநகர் சென்னையின் நிலையோ மிக மோசமாக உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளில் 400 அடிக்கும் மேல் போர்வெல் அமைத்தால் கூட சில இடங்களில் தண்ணீர் கிடைக்கவில்லை.
கோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி
இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு சென்னையில் நிலத்தடி நீர் துளியும் கிடைக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலமே தண்ணீருக்காக அல்லாடி வரும் நிலையில், தண்ணீர் பிரச்சனை குறித்து துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்துகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது குடிநீர் பஞ்சம் அல்ல, குடிநீர் பற்றாக்குறை தான் என திட்டவட்டமாக கூறினார்.
பருவ மழை பொய்த்து விட்டதால் தான் தற்போது தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே தவிர, குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என குறிப்பிட்டார். எனினும் இந்நிலையை சமாளிக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாநிலம் முழுவதும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் பெய்ய வேண்டிய மழை பெய்யாததால், விவசாயத்திற்கு தேவையான நீர் சரிவர கிடைக்கவில்லை. தூர்வாரும் பாராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்படும் நிதியில், டெல்டா பகுதியில் உள்ள ஆறுகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் டெல்டா பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை தூர்வார, மத்திய அரசிடம் ரூ17,600 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் கோரிக்கை குறித்து விரைந்து பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று, மத்திய அரசும் கூறியுள்ளதாக துணை முதல்வர் தகவல் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில் தான் யாகம் நடத்தப்பட்டதே தவிர, தமிழக அரசு செலவில் நடத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.