பேருந்தில் தொங்காதீங்க..அறிவுரைகளை கேட்காத மாணவர்கள் மீது புகார் கொடுக்கலாம்..போக்குவரத்து துறை ஆணை
பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கும்படி நடத்துநர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கி உள்ளது.
சென்னை: மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரைகளை கேட்காமல் மீறி செயல்பட்டாலோ, கட்டுப்பாட்டை மீறினாலோ ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தை நிறுத்தி விட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையிட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக பொது மேலாளர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ய கூடாது. பேருந்துகளில் ஏறும் போதும், பயணம் செய்யும் போதும் மாணவர்கள் பாதுகாப்பான விதிகளை கடைபிடிக்கும்படி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வழிகாட்ட வேண்டும்.

அதன்படி, வழியில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேர்ந்தாலோ, உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பேருந்தை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரைகளை கேட்காமல் மீறி செயல்பட்டாலோ, கட்டுப்பாட்டை மீறினாலோ ஓட்டுநர், நடத்துநர்கள் பேருந்தை நிறுத்திவிட வேண்டும்.
அருகில் உள்ள காவல் நிலையம், காவல்துறை அவசர எண் 100 அல்லது 94450 30533 என்ற மாநகர போக்குவரத்து கழக புகார் எண்ணுக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும். பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications