பிரேக்கிற்கு பதில் ஆக்சிலரேட்டரை மிதித்து விபத்து! ஒரு மாதம் கழித்து சென்னை ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட்
சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தின் நடைமேடையில் மின்சார ரயில் ஏறி விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் தவறால் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் சென்னை ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
தாம்பரம் நோக்கி செல்ல வேண்டிய அந்த ரயில் கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது.

ரயில் விபத்து
இதனால் உஷாரான ரயில் ஓட்டுநர் நடைமேடையில் இருந்த பயணிகளை ஒதுங்குமாறு கூச்சலிட்டபடி சென்றார். ஒரு கட்டத்தில் ரயில் நிலைய நடைமேடையின் மீது மோதிய மின்சார ரயில் அதில் ஏறி சென்று ஒரு கடையின் சுவற்றின் மீது மோதி ரயில் நின்றது. இதனால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

பெரும் அசம்பாவீதம் தவிர்ப்பு
இதில் ரயில் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் விடுமுறை நாளானன்று குறைவான மக்கள் கூட்டமே இருந்ததால் பெரும் அசம்பாவீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
முதல் கட்ட விசாரணையில் ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான ரயிலின் முன் பகுதி இந்த விபத்து சேதமடைந்தது. வேறு யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவித்த ரயில்வே போலீசார் இதுகுறித்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

ரயில் ஓட்டுநர் பணியிடை நீக்கம்
இந்த விபத்து தொடர்பாக தொழில்நுட்பக்குழுவினர் உதவியுடன் ஒரு மாதமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. விசாரணையின் முடிவில் விபத்துக்கு ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்பது உறுதியானது. பிரேக் பிடிக்காத ரயிலை தொடர்ந்து ஓட்டுநர் இயக்கியதே காரணம் என்பது விசாரணையில் உறுதியானதை அடுத்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications