சென்னையில் டிரோன்கள் பறக்க தடை.. ஃபுல் ஃபோகஸில் ஸ்ட்ராங் ரூம்கள் .. சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் லோக்சபா தொகுதி வாரியாக வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மற்றும் ஈரோட்டில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள், பழுதை சரி செய்தனர்.
இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் என்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அண்மையில், திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள ஜூன் 4 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், "ஏப்ரல் 19-ல் நடந்த மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் லயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம் ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144ன் கீழ், சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மேற்கூறிய இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக (Red Zone) அறிவிக்கப்பட்டு ஜூன் 4 வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடை விதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications