வறட்சி நிவாரணம்.. விவசாயிகளுக்கு இழப்பீடு ரூ.181.40 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையின்றி பயிர் இழப்பால் பாதிக்கப்பட்ட 1.87 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.181.40 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை அபரிமிதமாக பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறினாலும் சில ஊர்களில் கண்மாய்கள் நிரம்பவில்லை. விவசாயமும் சரிவர நடைபெறவில்லை. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போனதால் பல கண்மாய்கள் வறண்டு காணப்படுகின்றன. அணைகள் வற்ற தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டில் குறைந்த மழைப்பொழிவு காரணத்தினால் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33 சதவிகிதத்திற்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் 25 வட்டங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கையினை எடுக்குமாறு வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் போதிய மழையில்லாததால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்களில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, திருவாடானை, ராமநாதபுரம், நயினார்கோயில், திருப்புல்லானி, ஆர்.எஸ்.புரம், மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட 25 வட்டங்களில் 1,42,832 ஹெக்டேர் பரப்பில் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. 1,87,275 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழப்பீடாக ரூ.181.40 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications