இன்று வர முடியாது.. ED விசாரணைக்கு ஆஜராகாத நடிகர் ஸ்ரீகாந்த்.. போதைப்பொருள் வழக்கின் பின்னணி
சென்னை: போதைப் பொருள் வாங்கி பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கி உள்ளது. இன்று நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜராகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் தனியார் பாரில் கடந்த மே மாதம் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அஜய் வாண்டையார், ரவுடி சுனாமி சேதுபதி, அதிமுக நிர்வாகி பிரசாத், நாகேந்திர சேதுபதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் வழங்கிய தகவலின் பேரில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார் என்ற பிரிட்டோ, மேற்கு ஆப்பரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆகியோர் கடந்த ஜூன் 17ல் கைது செய்யப்பட்டனர். அப்போது சினிமா நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
கடந்த ஜூன் 23ல் நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் நடிகர் கிருஷ்ணாவும் ஜூன் 27 ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் கலாசாரம் உள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது. இப்படியான சூழலில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது என்பது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த போதைப்பொருள் விஷயத்தில் வெளிநாட்டு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரியவந்தது.
இதனால் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கி உள்ளது. தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை சார்பில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. நடிகர் ஸ்ரீகாந்த் இன்று (அக்டோபர் 28) விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இன்றைய தினம் ஆஜராக முடியவில்லை. இதனால் இன்னொரு நாளில் ஆஜராக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நடிகர் கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் அக்டோபர் 29 (அதாவது நாளை) ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகாமல் மாற்று தேதி கேட்டுள்ள நிலையில் நாளை கிருஷ்ணா விசாரணைக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications