நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை? கேளம்பாக்கத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? டிரம்ஸ் சிவமணி
நடிகர் மயில்சாமிக்கு என்னவாயிற்று என்பது குறித்தும் கடைசி ஆசை குறித்தும் விவரித்தார் டிரம்ஸ் சிவமணி.
சென்னை: நடிகர் மயில்சாமி அதிகாலை 3 மணி வரை தன்னுடன்தான் இருந்தார் என்றும் அவரது கடைசி ஆசையை தன்னிடம் கூறினார் என்றும் டிரம்ஸ் சிவமணி தெரிவித்தார்.
நடிகர் மயில்சாமி திரைப்பட நடிகராக இருந்தாலும் அவர் வசித்து வரும் சாலிகிராமம் பகுதியில் உள்ள மக்களோடு மக்களாக பழகுவார். இல்லை என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு கொடுத்து பணமும் கொடுத்தனுப்புவார்.
கொரோனா, மழை, புயல் , வெள்ளம் உள்ளிட்ட காலங்களின் போது இவர் இருக்கும் பகுதிகளில் பட்டினியாக யாரையுமே வைத்ததில்லை. தன்னால் இயன்ற அளவுக்கு உதவிகளை செய்வார். அது போதாவிட்டால் சக நடிகர்களிடம் உதவிகளை கேட்டு செய்வார்.

இரக்க குணம்
அத்தகைய இரக்கக் குணம் படைத்த மயில்சாமி, சினிமா ஷூட்டிங்கில் வந்தாலும் லைட் பாய் முதல் அனைவருக்கும் உணவுகளை வாங்கிக் கொடுப்பார். எம்ஜிஆரின் தீவிர அபிமானி, இவர் வசிக்கும் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தினமும் மாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தவர். டீக்கடைக்கு செல்வது, காய்கறிகளை வாங்குவது என எந்த பந்தா இல்லாமல் சாலிகிராமத்தையே வலம் வந்தார்.

சிவராத்திரி
அப்படிப்பட்ட அவர் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று இரவு முழுவதும் வழிபாடு நடத்தினார். பிறகு அதிகாலை வீடு திரும்பிய போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஏற்கெனவே மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இறந்துவிட்டார்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய டிரம்ஸ் சிவமணி, மயில்சாமி குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

டிரம்ஸ் சிவமணி
இதுகுறித்து டிரம்ஸ் சிவமணி கூறுகையில், எனது நீண்ட கால நண்பர் மயில்சாமி. நேற்றைய தினம் எனது புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு "ஐயா கலைஞர் போல் இருக்கிறீர்" என்றார். மேலும் அது போல் ஒரு புகைப்படத்தை தனக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். தீவிர சிவ பக்தரான மயில்சாமிதான் என்னை முதல்முறையாக சிவராத்திரியின் போது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வாசிக்க வைத்தார்.

சிவன் கோயில்களில் கச்சேரி
அது முதல் ஒவ்வொரு சிவன் கோயிலிலும் நான் சிவராத்திரியின் போது வாசித்து வருகிறேன். நேற்று இரவு எனக்கு போன் செய்த மயில், தான் திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு செல்கிறேன் என்றார். என்னையும் அங்கு வந்துவிட சொன்னார். அவர் எப்போது கோயிலுக்கு கச்சேரிக்கு அழைத்தாலும் நான் மறுக்காமல் சென்றுவிடுவேன். அது போல் நானும் அவரும் மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றோம். அங்கு இரவு முழுவதும் இசைக்கச்சேரி நடத்தினோம். எனக்கு அவர் மைக்கை பிடித்தபடியே இருந்தார். நான் பாடிய பாடலுக்கும் எனது டிரம்ஸ் இசைக்கும் சிரித்தபடியே ரசித்தார். அவரும் மைக்கில் சுவாமி பாடல்களை பாடினார்.

மருந்தீஸ்வரர் கோயில்
இதையடுத்து நான் 5 ஆம் கால பூஜைக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு செல்கிறேன் என கூறினேன். உடனே அவர் தனது குடும்பத்தினரை வீட்டில் விட்டுவிட்டு நானும் வருகிறேன் என்றார். நான் வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடுங்கள் என்றேன். இதையடுத்து வீட்டிற்கு போய்விட்டார். மருந்தீஸ்வரர் கோயிலில் இருந்து வெளியே வருகிறேன். அப்போது அவர் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே நான் என்ன மயில் அடுத்து எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும், எங்கு வாசிக்க வேண்டும் என கேட்டேன். உடனே அவருடைய மகன் ஓவென அழுதார். அப்போதுதான் எனக்கு விஷயத்தை சொன்னார்கள். சிவராத்திரி அன்று அவர் மோட்சம் அடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ரஜினிகாந்த்
அவர் என்னிடம் ஒரு விஷயத்தை கூறினார். மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு விவேக்கை அழைத்து வந்திருக்கிறேன். அது போல் சில பிரபலங்களின் பெயர்களையும் கூறி அவர்களை எல்லாம் அழைத்து வந்திருக்கிறேன். தனக்கு ஒரு ஆசை என கூறிய மயில், ரஜினிகாந்தை இந்த மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு அழைத்து வர வேண்டும். இங்குள்ள சிவலிங்கத்திற்கு அவரது கைகளால் பாலாபிஷேகம் செய்ய வைக்க வேண்டும் என தனது ஆசையை மயில்சாமி என்னிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications