12 டிஎஸ்பி, உதவி ஆணையர்கள் இடமாற்றம்.. பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் உத்தரவு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இருந்து 59 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் 12 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 59 டிஎஸ்பில்க்கள் பணியிட மாற்றம் செய்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் உத்தரவிட்டார்.

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கீதா, சென்னை சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவுக்கும், மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி செந்தில் குமார் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமையகத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 12 டிஎஸ்பிக்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆயுதப்படை உதவி ஆணையராக இருந்த சுப்பிரமணியம், கோயம்பேடு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கோவை போக்குவரத்து உதவி ஆணையர் தென்னரசு, நீலகிரி ஆயுதப்படை டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஆயுதப்படை உதவி ஆணையர் முருகராஜ், கொளத்தூர் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி போக்குவரத்து காவல் உதவி ஆணையர் முகமது ரஃபி, தூத்துக்குடி ஆயுதப்படை துணை டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ராஜா, திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications