நள்ளிரவிலும் நகர முடியலையே.. பரனூர் சுங்கச்சாவடியில் 3 கிமீட்டர் நிற்கும் வாகனங்கள்! காரணம் இதுதான்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை 3 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை - திருச்சியை இணைக்கும் முக்கிய வகையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தென்மாவட்ட மக்களுக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை பெரிதும் பயனளித்து வருகிறது.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது காணப்படும்.
அதாவது சென்னையில் பணியாற்றும் பலரும் வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது தான் இதற்கு காரணமாகும். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை (நாளை) கிருஷ்ணர் ஜெயந்தி விடுமுறை என்பதால் ஏராளமானவர்கள் சென்னையை காலி செய்து சொந்த ஊரை நோக்கி படையெடுத்தது தான் இதற்கு காரணமாகும். இத்தகைய சூழலில் தான் இன்று காலை முதல் திடீரென்று பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் முதல் பரனூர் சுங்கச்சாவடி வரை புதிய சாலை அமைக்கும் பணி என்பது நடந்து வருகிறது. இதனால் இன்று காலை முதலே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரமாகியும் கூட போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்ந்து வருகிறது. வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணிக்கும் பொதுமக்கள்பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக சில ஆம்புலன்ஸ்களும் சிக்கின. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டன. இருப்பினும் பிற வாகனங்கள் வழிவிட்டதால் சிரமத்துக்கு நடுவே பரனூர் சுங்கச்சாவடியை கடந்து ஆம்புலன்ஸ்கள் சென்றன.












Click it and Unblock the Notifications