சரியான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் பெரிய சேதம் தவிர்ப்பு.. டிச.5ல் என்ன நடந்தது?
சென்னை: சரியான நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டதால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி அன்று மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 10000 கனஅடி நீர்திறக்கப்பட்டதால் சைதாப்பேட்டை ஜாபர்கான்பேட்டையில் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் வரப்போவதை உணர்ந்து முன்கூட்டியே தண்ணீரை வெளியேற்றியதால் சென்னையில் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அதேநேரம் அளவுக்கு மீறி மழை பெய்தால், வெள்ளமாக வந்து சென்னையை பாதிக்கும் ஏரியாகவும் செம்பரம்பாக்கம் ஏரி இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி டிசம்பர் 4 மற்றும் 5ம் தேதி பெய்த மழைக்கு முன்பே முழுமையாக நிறைந்துவிட்டது.

அதாவது நவம்பர் இறுதியிலேயே தண்ணீர் முழுமையாக நிரம்பி இருந்தது. இதனிடையே மிக்ஜாம் புயல் காரணமான கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், செம்பரம்பாக்கத்திற்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்ற வேண்டிய அபாய நிலை இருந்தது. ஆனால் நல்ல வேளையாக நவம்பர் இறுதி தொடங்கி டிசம்பர் 3ம் தேதிக்குள் 4இல் ஒரு பங்கு நீர் அவசர அவரசமாக வெளியற்றப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் நவம்பர் 30ம் தேதி 89 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், நவம்பர் 3ம் தேதி 76 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தான் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புள்ளிவிவரத்தின்படி பார்த்தால் டிசம்பர் 3ம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளவான 3645 மில்லியன் கனஅடி அளவில் 2769 கனஅடி அளவு மட்டுமே நீர் இருப்பாக வைக்கப்பட்டிருந்தது.. மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 76 சதவீதத்தில் இருந்துது 95 சதவீதமாக உயர்ந்தது.
இதனால் டிசம்பர் 5ம் தேதி பாதுகாப்பு கருதி 10000 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 10000 கனஅடி நீர் திறக்கப்பட்டதால் சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டையில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆனால் மேலும் தண்ணீர் வெளியேற்றப்பட்டிருந்தால் மிகப்பெரிய சேதம் அடையாறு கரையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. புயலுக்கு முன்பே சரியான நேரத்தில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அடையாறு ஒட்டிய பகுதிகளில் 2015 போல் பாதிப்பு ஏற்படவில்லை என்று சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications