பூச்சாண்டிக்கு பயந்திருந்தா கட்சியை புதைச்ச இடத்தில் புல் முளைத்திருக்கும்.. துரைமுருகன் ஆவேசம்
சென்னை: வருமான வரித்துறை சோதனை பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று அந்த கட்சி செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி.. பிரான்சில் 3-வது முறையாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்!
இந்த நிலையில்தான் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன். அப்போது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
இரும்பு நெஞ்சம்
கருணாநிதியைவிட இரும்பு நெஞ்சம் படைத்தவர் ஸ்டாலின். வருமான வரித்துறை சோதனை நடத்தி அதை அசைத்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. இதுபோன்ற பூச்சாண்டி செயல்களுக்கு திமுக அஞ்சாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சோதனை நடத்தினால் திமுக தளர்ந்து விடும் என்று நினைத்துக் கொண்டு இந்த சோதனை நடத்தப்படுகிறது.
நாணயம் இல்லை
இத்தகைய போக்கை மத்திய அரசு கடைபிடிப்பது ஜனநாயகம் கிடையாது, நாணயமான அரசியல் கிடையாது. திமுக பொதுச் செயலாளர் என்ற வகையில் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு நான் கண்டனத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மன உறுதி
அடக்குமுறை, சிறைச்சாலை, வழக்குகள், தண்டனை போன்றவற்றுக்கு திமுக பயந்து இருந்தால் என்றைக்கோ, இந்த கட்சி செத்துப்போய் அந்த பிணத்தின் மீது புல் முளைத்து போயிருக்கும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு மேலும் மன உறுதியையும், திட சிந்தனையையும் வழங்கும்.
செல்ல மகள்
செந்தாமரை, ஸ்டாலின் செல்ல மகள், ஒரே மகள். நான் அவரை அறிவேன். செந்தாமரையிடம், ஸ்டாலின் அபரிமிதமான அன்பு கொண்டவர். அந்த குழந்தை வருத்தப்பட்டால் தலைவர் தாங்க மாட்டார் என்று மத்திய அரசு நினைத்திருக்கலாம்.
வீறு கொண்டு எழுவார்
மகளை ஒரு கணம் நினைத்துப் பார்த்து விட்டு மறுகணம் லட்சோபலட்சம் தொண்டர்களைக் கொண்ட திமுக தலைவர் நான், என்ற நினைப்போடு ஸ்டாலின் வீறுகொண்டு எழுந்து நிற்கக்கூடிய வீரசிங்கம். இத்தகைய போக்கை எந்த அரசாங்கமாக இருந்தாலும் கடைபிடிக்கக் கூடாது. ஜனநாயக நாட்டில் இத்தகைய போக்கு வளர்வது சரி கிடையாது. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.