Exclusive மதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றத் துடிக்கிறார் துரை வைகோ.. வல்லம் பசீர் பரபர பேட்டி!
சென்னை: மதிமுகவில் சாதி தலைதூக்கியுள்ளது, கட்சியை சாதிக்கட்சியாக மாற்ற முயற்சிக்கிறார் முதன்மைச் செயலாளர் துரை வைகோ என பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் வளைகுடா பொறுப்பாளரான வல்லம் பசீர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கருப்புச் சட்டை அணிந்து சென்றிருந்தார். அங்கு அவர், பா.ரஞ்சித் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படத்தை விருதுநகர் மாவட்ட மதிமுக மாணவரணி செயலாளர் மாரிச்சாமி பகிர்ந்து, சாதி ரீதியான இணைவு என்ற வகையில் விமர்சித்திருந்தார். இதையடுத்து, மல்லை சத்யா, அதற்கு பதில் அளித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் மதிமுகவினர் இடையே விவாதமாக மாறியது.

இந்நிலையில், மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வல்லம் பசீர், இந்த சர்ச்சை தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். மதிமுக வளைகுடா பொறுப்பாளராக இருந்தவர் வல்லம் பசீர். கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
துரை வைகோ வருகைக்குப் பிறகு மதிமுகவில் சாதியவாத சிந்தனை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துரை வைகோ, தனது சொந்த சாதியினருக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கருதி, கட்சிக்கு பெரிய அளவில் பணியாற்றாதவர்களை மாவட்ட, மாநில பொறுப்புகளில் அமர்த்தி வருகிறார்.
மூத்த நிர்வாகிகளை ஓரம்கட்டி விட்டார். கட்சியில் அடிப்படையிலேயே செல்வாக்கு மிக்கவர்களை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டார். இப்போது மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் மாரிச்சாமி, மல்லை சத்யா ஆம்ஸ்ட்ராங்குக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது கருப்புச் சட்டை அணிந்திருப்பதை விமர்சித்து பதிவிட்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அதற்கு பின்னால் நிச்சயம் துரை வைகோ இருக்கிறார்.
மறுமலர்ச்சி திமுக சார்பில் எம்.பியாகி நாடாளுமன்றத்திற்குச் சென்ற துரை வைகோ, திராவிட இயக்கத்தின் தூண்களான பெரியார், அண்ணா பெயரை நாடாளுமன்றத்தில் துரை வைகோ சொல்லவில்லை. ஆனால், தனது கன்னி உரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைச் சொல்கிறார். கட்டபொம்மனை சாதி அடையாளத்திற்குள் அடைக்க நான் விரும்பவில்லை. ஆனால், கட்டபொம்மன் பெயரை இவர் எதற்காக அங்கு சொன்னார் என்பதை உணர முடியும்.
ஆனால், பெரியார், அண்ணா பெயர்களைச் சொல்ல அஞ்சுகிறவரோடு எப்படி திராவிட இயக்கத்தவர்கள் லட்சியத்தை தாங்கி நடைபோட முடியும். துரை வைகோ எம்.பியான பிறகு முதன்முறையாக கலிங்கப்பட்டிக்கு செல்கிறார். அப்போது சாதி சங்கம் ஒன்று ஏற்பாடு செய்த கோவில் நிகழ்வில் தான் முதன் முதலில் பங்கேற்கிறார். வைகோ, சாதி ரீதியான நிகழ்வுகளில் பங்கேற்றிராத நிலையில் துரை வைகோ இப்படியான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது அவர் மீதான குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.
வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த ஜெயலலிதா அரசைக் கண்டித்து நான்கு ஆண்டுகள் அந்த ஆட்சி அகற்றப்படும் வரையில் கருப்பு சட்டையை கழட்டாமல் இருந்தவவர் மல்லை சத்யா. 2006ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதும், ஜெயலலிதாவை பார்க்க கருப்புச் சட்டையுடனே சென்றவர் மல்லை சத்யா. பிறகு வைகோ கேட்டுக்கொண்டதால் தான் வெள்ளை சட்டைக்கு மாறினார்.
இன்றைக்கு மல்லை சத்யா, கறுப்புச் சட்டை அணிந்திருப்பதை சாதிய நோக்கத்தோடு கட்சிக்குள் ஒரு பிளவுவாத கருத்தை ஏற்படுத்துகிறார் துரை வைகோ. மதிமுக இன்றைக்கு வைகோவின் கட்டுப்பாட்டில் இல்லை. சாதி, கட்சிக்குள் தலைதூக்கியுள்ளது. துரை வைகோவின் நடவடிக்கைகள் கட்சியை சீர்குலைத்துள்ளது எனக் கூறியுள்ளார் வல்லம் பசீர்.












Click it and Unblock the Notifications