ஆளுநர், அண்ணாமலை சேர்ந்து தமிழ்நாட்டில் சனாதனத்தை கொண்டு வர நினைக்கிறார்கள்: துரை வைகோ
சென்னை: இரட்டை தலைமையாக இருந்து கொண்டு அண்ணாமலையும், ஆளுநரும் தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை கொண்டு வர நினைக்கின்றார்கள் என துரை வைகோ தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றாமல் தமிழ்நாட்டிற்கு தமிழகம் என பெயர் வைக்க வேண்டும் என்ற பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள் என அவர் கூறி இருக்கிறார்.
மதுரை ஒத்தக்கடை யானைமலை பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அரிய மலைகளில் ஒன்று மதுரை யானைமலை ஒரே பாறையால் ஆனது யானைமலை. இதற்கு நீண்ட வரலாறு உள்ளது. இந்த மலையில் குவாரி தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
'மீசைக்காரர்’ இறங்குறாராமே.. இடைத்தேர்தலில் “இரட்டை இலை” திடீரென பற்றவைத்த வெடி! ஆஹா இதென்ன வியூகம்?
யானை மாரத்தான்
அப்போது இந்த பகுதி மக்களுடன் இணைந்து யானை மலையை காப்பாற்றுவதற்காக தலைவர் வைகோ போராடி உள்ளார். பல இயற்கை வளங்களை காப்பாற்றியவர் வைகோ. இந்த மலையை காப்பாற்றுவதற்காக மதிமுக சார்பில் ஆரம்பிக்கப்பட்டது யானை மாரத்தான். இன்று நடந்த மாரத்தான் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டது." என்றார்.
சேது சமுத்திர திட்டம்
ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து மனிதத்தால் ஒன்றிணைவோம். சேது சமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "வைகோவை பொருத்தவரை இது மிக முக்கிய திட்டம். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வர முயன்று பின் நேரு காலத்தில் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றன. இந்த திட்டத்தை கொண்டு வந்தால் தென் மாவட்ட தொழில்கள் மேலோங்கும்.
முதலமைச்சருக்கு நன்றி
அரசியல் காரணங்களாலும், மதவாத சக்திகளின் காரணமாகவும் இந்த திட்டம் நிறைவேறாமல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. சேது சமுத்திரத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து முதலமைச்சர் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மதிமுக சார்பாக இதற்கு நன்றியை முதலமைச்சருக்கு தெரிவிக்கிறோம்.
சினிமா ரசிகர்கள்
சினிமா நடிகர்களை பொருத்தவரை கலைஞர்களை ரசிக்க வேண்டியதுதான். அவர்கள் நடிப்பை பாராட்ட வேண்டியதுதான். அவர்கள் சமூக நல பார்வையை வாழ்த்தலாம். ஆனால் நமது வாழ்க்கையில் படிப்பதும் முன்னேறுவதும் நமது சமுதாயத்தை முன்னேற்றுவதும்தான் நமது இளைஞர்களுக்கு தேவை. நானும் ரசிகராக இருந்தவன்தான். அது தவறு இல்லை. ஆனால் எல்லையை தாண்டக்கூடாது. இது நமது பெற்றோருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடும்." என்றார்.
பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்," ஆளுநர் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுகிறார். இரட்டை தலைமையாக இருந்து கொண்டு அண்ணாமலை, ஆளுநர் தமிழ்நாட்டில் சனாதன கொள்கையை கொண்டு வர நினைக்கின்றனர். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றாமல் தமிழ்நாட்டை தமிழகம் என வைக்க வேண்டும் என்ற பிரச்சினையை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழ்நாடுக்காக உயிர் தியாகம்
திராவிட மாடல் என்பதை தமிழ்நாடு மாடல் இன்று மாற்றுவது குறித்த கேள்விக்கு, திராவிடம் என்பது வாழ்வியல். ஸ்டேட் ஆப் மெட்ராஸ் என்பதை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு பலர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது, ஆன்லைன் ரம்மி மூலம் பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் நீட் போன்ற சட்டங்களை நிறைவேற்றாமல் தமிழ்நாட்டை தமிழகம் என கூறி பா.ஜ.க சனாதனக் கொள்கையை நிறைவேற்ற பார்க்கிறார்கள்." என்று தெரிவித்தார்.