மதிமுகவில் புயலை கிளப்பிய கடிதம்.. துரைசாமியின் பதவி பறிப்பா? துரை வைகோ கூறிய பரபரப்பு தகவல்
சென்னை: மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்த அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமியின் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்விக்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பதிலளித்துள்ளார்.
வாரிசு அரசியலை எதிர்த்து உருவாகிய மதிமுகவிலேயே வாரிசா? இதுதான் மூத்த நிர்வாகிகளின் ஆதங்கமாக இருக்கிறது. எப்போது வைகோ மகன் துரை வைகோவுக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே மதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

ஆனால் இது வாரிசு அரசியல் இல்லை என்றும் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் கட்சியை தான் கவனித்துக் கொள்வதாகவும் துரை வைகோ தனது தரப்பு நியாயத்தை முன் வைக்கிறார். ஆனால் ஸ்டாலினுக்கு திமுகவில் பதவி கொடுத்ததால்தானே வைகோவுக்கு கோபம் ஏற்பட்டது.
அதனால்தான் அவர் அங்கிருந்து தனது ஆதரவாளர்கள், மாவட்டச் செயலாலர்களுடன் பிரிந்து மதிமுக என்ற கட்சியை தொடங்கினார். பிறகு துரை வைகோவுக்கு பதவி கொடுத்ததால் மதிமுக என்ற கட்சியை தொடங்கியதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விட்டதாக மூத்த நிர்வாகிகள் போர்க் கொடி பிடிக்கிறார்கள்.
இந்த நிலையில் மதிமுக அவைத் தலைவராக உள்ள திருப்பூர் துரைசாமி இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மதிமுகவை தொடங்கிய போது தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது.
இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என வைகோவை கடுமையா சாடி கடிதம் எழுதியுள்ளார் துரைசாமி.
வைகோவிற்கு ஏற்கெனவே 4 முறை கடிதம் எழுதியும் ஏன் பதில் தரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய வைகோ, கட்சியில் நான் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். கட்சியில் நானா பிளவை ஏற்படுத்துகிறேன் என துரைசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து துரை வைகோ டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவுடன் மதிமுகவை இணைக்க தொண்டர்களுக்கு இஷ்டம் இல்லை. கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கென தனி கொள்கை உள்ளது. துரைசாமி மூத்தவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என துரை வைகோ கூறியிருந்தார். இதுகுறித்து துரைசாமி கூறுகையில் துரை வைகோ சின்னப்பையன், நான் வைகோவின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என்றார்.
இது குறித்து மீண்டும் துரை வைகோ கூறுகையில், மதிமுக அவைத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் துரைசாமியை நீக்குவது குறித்து ஜூனில் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பொதுச் செயலாளர் வைகோ பதில் அளிக்கப்பார். துரைசாமி மீது நடவடி்கை குறித்து யோசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். திருப்பூரில் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் துரைசாமி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications