லோக்சபா தேர்தல்:வைகோ மகன் துரை வைகோ, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டி? "பெற்றோர்" சொல்வது என்ன?
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற மதிமுக துரை வைகோ, தேமுதிக விஜய பிரபாகரன் குறித்து பெற்றோர்களான வைகோ, பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்துகள் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. தேசிய அளவில் "இந்தியா" கூட்டணியிலும் மதிமுக இடம் பெற்றிருக்கிறது.

தேமுதிகவைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி கூட்டிய 38 கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. இத்தனைக்கும் தேமுதிகவை மிக மிக சிறிய கட்சிகள் கூட டெல்லி கூட்டத்துக்கு அழைக்கப்பட்டது. இது தேமுதிகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போதைய நிலையில் தேமுதிக திக்கு தெரியாத திசையில் நிற்கிறது.
விஜய பிரபாகரன் குறித்து பிரேமலதா: இந்நிலையில் செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவில் எனக்கு பதவியே 15 ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. தேமுதிகவில் யாருக்கு என்ன பதவி என்பதை விஜயகாந்த் மட்டுமே முடிவெடுப்பார். அதேபோல விஜய பிரபாகரனுக்கு என்ன பதவி? அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பது விஜயகாந்த் கையில்தான் இருக்கிறது என்றார். ஆனால் விஜய பிரபாகரனை தேர்தல் களமிறக்க தேமுதிக திட்டமிட்டு வருகிறது; ஏதேனும் ஒரு கூட்டணியில் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தால்தான் இதனைகூட தேமுதிக பரிசீலிக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
துரை வைகோவும் தேர்தலும்: இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யின் மகன் துரை வைகோ, சட்டசபை தேர்தலின் போதே போட்டியிடக் கூடும் என கூறப்பட்டது. ஆனால் துரை வைகோ போட்டியிடவில்லை. இதனால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா? என்கிற விவாதங்கள் நடைபெறுகிறது. துரை வைகோ, லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் திமுக தலைமை அவரது வெற்றியை உறுதி செய்யும் என்கிற ஒரு நம்பிக்கையும் உள்ளது.
துரை வைகோ குறித்து வைகோ: ஆனால் மதுரையில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநாட்டில், என் மகன் என்னைப் போல பதவிகளுக்காக அரசியலுக்கு வரவில்லை என்றார். அத்துடன் தேர்தலில் போட்டியிடவோ, பதவிக்காக துரை வைகோ அரசியலுக்கு வரவில்லை என அழுத்தம் திருத்தமாக வைகோ கூறினார். ஒருவேளை லோக்சபா தேர்தலிலும் துரை வைகோவை போட்டியிட வைக்க வேண்டாம் என வைகோ முடிவெடுத்துவிட்டாரோ என்கிற கேள்வியை இது எழுப்புகிறது.
வைகோவின் கணக்கு?: இன்னொரு பக்கம், வைகோவின் ராஜ்யசபா எம்பி பதவிகாலம் இன்னும் காலம் இருக்கிறது. வைகோவுக்குப் பின்னர் மகன் துரை வைகோவை அந்த ராஜ்யசபா எம்பி சீட்டுக்கு திமுக உதவியுடன் கொடுத்துவிடலாம் என கணக்கு போடுகிறாரா? வைகோ என்கிற கேள்வியும் மதிமுக மூத்த நிர்வாகிகளால் எழுப்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications