விஜய் குற்றச்சாட்டுக்கு "பச்சா இன் பாலிடிக்ஸ்".. தக் லைஃப் பதிலடி கொடுத்த துரைமுருகன்
சென்னை: குடும்ப நலனுக்காக தமிழகத்தின் மானத்தை பாஜகவிடம் திமுக அடகு வைத்துவிட்டதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, 'பச்சா இன் பாலிடிக்ஸ்' என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோகம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே, தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம்.

அதேபோல, ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவர் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். அதையும் நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்துள்ளது.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது.
எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நீதி ஆயோக் கூட்டம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்குவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல்.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது, மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குடும்ப நலனுக்காக தமிழகத்தின் மானத்தை பாஜகவிடம் திமுக அடகு வைத்துவிட்டதாக விஜய் குற்றம் சாட்டியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'பச்சா இன் பாலிடிக்ஸ்' என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை பெல் அண்ணா நகர், லாலாபேட்டை, சீக்கராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பல லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டன. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில், திமுக மத்திய அரசு பாஜகவிடம் குடும்ப சூழ்நிலை காரணமாக தமிழக மானத்தை அடமானம் வைத்திருப்பதாக விஜய் அறிக்கை வெளியிட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "பச்சா இன் பாலிடிக்ஸ்" அரசியல் என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications