மழை வெளுத்து வாங்குறதை பார்த்தா.. 2015 சென்னை பெரு வெள்ளத்தை விஞ்சிடும் போலயே!.. துரைமுருகன் கவலை
சென்னை: சென்னையில் கனமழை தொடர்வதை பார்த்தால் 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தை மிஞ்சி விட வாய்ப்புள்ளதாக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன் தினம் முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 1 மணி முதல் 45 நிமிடத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியிருந்தது.
அது போல் கடந்த 24 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை என்பது மிக அதிக அளவு என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த மழை இன்னும் இரு தினங்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடசென்னை
நேற்று பெய்த மழைக்கே வடசென்னை உள்பட சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த மழை பாதிப்பை நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் சென்னை மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என்றும் சென்னை 160 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார்.

2015 மழை பெள்ளம்
அப்போது அவர் கூறுகையில் சென்னையில் மழை காரணமாக பாதிப்பு அடைந்த பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வானிலை அறிவிப்பை பொருத்தவரை இதே போன்ற கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இந்த மழையின் பாதிப்பு கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட அதிகமாக வாய்ப்புள்ளதாக துரைமுருகன் கவலை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை பெருவெள்ளம் 2015
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரே நாளில் அதிக மழை பெய்தது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியும் திறந்து விடப்பட்டது. இதனால் அடையாறு ஆறு, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னையில் பல இடங்களில் இரண்டாவது தளம் வரை தண்ணீர் தேங்கி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் படையெடுத்த வண்ணம் இருந்தனர். பலர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். பல தங்கள் உடைமைகளை இழந்தனர். கார், சொகுசு பங்களா வைத்திருந்தவர்கள் கூட குழந்தைக்கு ஒரு பாட்டில் பால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கடுத்து ஒவ்வொரு முறையும் பருவமழையின் போது 2015 பெருவெள்ளம்தான் மக்கள் கண்முன் வந்து செல்லும். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்து பொதுமக்களை மேலும் அச்சத்தை ஏற்படுத்திவிடுமோ என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications