துர்கா ஸ்டாலின்.. மேடையிலேயே வார்த்தைய விட்ட பொன்முடி.. உடனே கிளம்பி வந்த எதிர்க்கட்சிகள்.. என்னவாம்
சென்னை: துர்கா ஸ்டாலினை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புகழ்ந்து பேசியிருந்த நிலையில், இதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க துவங்கி உள்ளன.. இந்த விமர்சனங்களுக்கு திமுகவினர் திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
திமுக மூத்த நிர்வாகிகளின் சில பேட்டிகளும், பேச்சுக்களும் அவ்வப்போது சர்ச்சையாகிவிடுவது வாடிக்கையாகி வருகின்றன... திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, கவுன்சிலர்களால் சர்ச்சை கிளம்பியது.. பிறகு மா.செ.க்களால் சர்ச்சை கிளம்பியது.. இதற்கு பிறகு, சில திமுகவின் சீனியர்களாலேயே அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
திருச்சி திமுக ஓராண்டு சாதனை கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசியபோது, ''நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்பவும் நல்லவர்கள்.. இனி பொன்முடியின் அடிமை புகழேந்தி எம்எல்ஏ பேசுவார்" என்றார்.. தங்களை அமைச்சர் நேரு, "அடிமைகள்" என்று பொதுமேடையில் சொன்னதை கேட்டு, திமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

ஆர்எஸ் பாரதி: அதேபோல, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர்.. சீனியர் என்றாலும், அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கி கொள்வார். ஏற்கெனவே பட்டியல் இனத்தவர் குறித்து பேசி வசமாக மாட்டிக் கொண்டதால், அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.. அதே போல, மீடியாக்களை "சிவப்பு விளக்கு" பகுதியுடன் தொடர்புபடுத்தி பேசினார்..
பிறகு, திமுகவின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க கூட்டத்தில் பேசியபோது, "திமுகவின் தேர்தல் அறிக்கையை டிஆர் பாலு தான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்.. இது தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
இந்த வரிசையில் பொன்முடியும் அடக்கம்.. இதில், "ஓசி பஸ்" விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் இணையத்தில் காட்டமாக பதிவிட்டு வந்தனர்.. திரும்பும் இடமெல்லாம் கேமரா இருக்கிறது பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.. எனினும், அடுத்தடுத்த சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.. இந்த சூழலில் தான் அமைச்சர் பொன்முடி புகழ்ந்து பேசுவதாக எண்ணி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் என்கிறார்கள்.

துர்கா ஸ்டாலின்: சாந்தகுமாரி எழுதிய 'கதை சொல்லும் குறள்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.. இந்த புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வெளியிட, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெற்றுக் கொண்டார்.. விழாவில் பொன்முடி பேசியபோது, திருக்குறளுக்கு, திருவள்ளுவருக்கு திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டார். பின்னர் துர்கா ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்."மனைவி அமைவதெல்லாம் வரம்.... முதல்வர் அரசியலுக்கும் ஆலோசனை சொல்லும் திறமைமிக்கவர்" என்றார்..
சித்தரஞ்சன் சாலை: ஏற்கனவே, ஒவ்வொரு விஷயத்திலும் முதல்வர் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு, ஆட்சியில் இருப்பதாக விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.. குறிப்பாக, அமைச்சரவை மாற்றத்தின்போது, இதுபோலவே விமர்சனங்கள் எழுந்தன.. அப்போது மூத்த அமைச்சர் துரைமுருகன், "இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.. நீங்கள் சித்தரஞ்சன் சாலைக்கு சென்றுதான் கேட்க வேண்டும்" என்றார்..

அதாவது முதல்வரிடம் கேளுங்கள் என்று சொல்லாமல், சித்தரஞ்சன் சாலை என்று முதல்வரின் இல்லம் அமைந்திருக்கும் சாலையை குறிப்பிட்டதையும் எதிர்க்கட்சிகள் சீண்டின. இப்போது, முதல்வருக்கு அவரது மனைவி அரசியல் ஆலோசனை சொல்வார் என்று பொன்முடி பேசியுள்ளதையும், எதிர்க்கட்சிகள் தற்போது விமர்சிக்க தொடங்கி உள்ளன.
பதிலடிகள்: ஆனால், அதேசமயம், இந்த விமர்சனங்களுக்கு இணையத்தில் பதிலடிகளும் வந்து விழுகின்றன.. அமைச்சர் பொன்முடி பேசுவதையெல்லாம் சர்ச்சையாக எடுத்து கொண்டு பேசக்கூடாது. ஒரு விழா மேடையில், புகழ்ந்து பேசுவதற்காக அப்படி சொல்லியிருக்கலாமே தவிர, அதற்காக உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது.. திமுக அரசை குறை சொல்ல வேண்டுமென்பதற்காகவே, இயல்பாக பேசியதைகூட அரசியல் செய்கிறார்கள்" என்றெல்லாம் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications