அப்பாடா.. ஸ்டாலின் என்னா ஸ்பீடு.. சுற்றுலாத் துறையா? சுறுசுறுப்புத் துறையா? சோழர் அருங்காட்சியகம் வருதாமே..?
சென்னை: இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் உலகையே தமிழ்நாடு பக்கம் முதன்முதலாகத் திரும்பிப் பார்க்கவைத்த பெருமை சுற்றுலாத் துறைக்குத்தான் உண்டு.
கடந்த ஆண்டு நடந்த 44வது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகள் மூலம் நமது மகாபலிபுரம், தாஜ்மஹாலையே பின்னுக்குத் தள்ளி அதிக வெளிநாட்டவர்கள் ஈர்த்த சுற்றுலாத் தலம் என்ற சாதனையைப் படைத்தது.

ஒரு சர்வதேச போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்தியதால் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்தார் முதல்வர் ஸ்டாலின். எப்படி? செஸ் ஒலிம்பியாட்' போட்டியை நடத்தியதால், தமிழ்நாட்டு விளையாட்டுத்துறைக்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து அந்தப் போட்டி சுற்றுலாத் துறைக்கு அதிக வருமானத்தையும் ஈட்டிக் கொடுத்தது. இதற்காகத்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் உதாரணத்தைச் சொன்னோம்.
அதன் தொடர்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் சுற்றுலாத் துறையில் அதிக கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்.

ஏற்கெனவே கீழடியில் ஒரு அருங்காட்சியகம் நம் வரலாற்றுப் பெருமைகளைப் பேச ஆரம்பித்துவிட்டது. அடுத்த அதிரடியாக இப்போது சோழர் பெருமையைப் பேச ஒரு அருங்காட்சியகம் கட்டும் பணிகள் தீவிரம் பெற்றுள்ளன.
தஞ்சாவூரில் சோழர்கள் அருங்காட்சியகம்:

தஞ்சையில் அமைய உள்ள அருங்காட்சியகத்தின் மூலம் ஒட்டுமொத்த சோழர்களின் வரலாற்றையும் காட்சிரீதியாக வருங்கால தலைமுறை கண்டுகளிக்கலாம் என்கிறார் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அதிகாரி ஒருவர்.
தஞ்சை மாவட்டத்தைத் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அது நெல்லுக்கு மட்டுமல்ல; சோழ நாகரிகத்திற்கும் அதுதான் களஞ்சியம்.

சுருக்கமாகச் சொன்னால் உலக நாகரிகத்திற்கு இணையான நாகரிகத்தைப் பெற்றுள்ளது சோழப் பேரரசு. இந்தப் பேரரசு செயல்வடிவம் கொடுத்த நீர்ப்பாசன திட்டங்கள், நகர அமைப்புக்கான முன்னோடி வடிவங்கள் எனப் பல பங்களிப்பை இவர்கள் செய்துள்ளனர்.
அதைத்தான் அப்படியே இந்த அருங்காட்சியகம் மூலம் படம்பிடித்துக் காட்டப் போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதற்கான நிலத்தைத் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தின் முழு விவரத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விளக்குவோம். அனுமதி கிடைத்ததும், அருங்காட்சியகத்தைக் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும். நிபுணர்களின் ஆய்வுக்குப் பிறகு இதற்கான திட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக சுமார் 12 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் ஐந்து ஏக்கரில் அருங்காட்சியகம் கட்டுவதற்காக ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது. சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லும்படி தஞ்சையின் மையப் பகுதியில் இந்த இடமானது உள்ளது.
தொல்லியல் துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, அடையாளம் காணப்பட்ட இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதிகாரப்பூர்வ அனுமதிக்குக் கிடைத்த பிறகு அருங்காட்சியக கட்டுமானம் தொடங்கும் எனச் செய்தி சொல்கிறது அதிகாரிகளின் தரப்பு.
சோழர்களைப் பற்றிய வரலாற்றுப் பெருமைகளை நாளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில் பல காட்சி வடிவிலான அரங்குகளுடன் இந்த அருங்காட்சியகத்தை உருவாக்க முதலமைச்சர் ஸ்டாலின் முனைப்புடன் ஆர்வம் காட்டி வருவதாகத் தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் நமக்குத் தகவல் தருகிறார்கள்.
சோழர் கால அடையாளங்களில் மிக முக்கியமானது கங்கைகொண்ட சோழபுரம். அங்கேதான் மிகப் பிரமாண்டமான சோழீசுவரர் கோயில் இருக்கிறது. அதேபோல் சமண நாகரிகத்தை எடுத்துக்கூறும் சித்தன்னவாசல். இந்த இரண்டு சுற்றுலா தளங்களின் வசதிகளை அதிகரிக்கத் தமிழக அரசு 9 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதற்கானப் பணிகளை வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ரூ.23.60 கோடி

கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா தளத்தை மேம்படுத்தவேண்டி, ரூ 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கிய கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலம். இதுவரை இங்குக் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் அனைத்தையும் தஞ்சாவூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் அரசு வைக்கத் திட்டமிட்டுள்ளது.
கங்கைச் சமவெளியை கி.பி.1023இல் முதலாம் ராஜேந்திர சோழன் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெரிய நகரத்தையும், கங்கைகொண்ட சோழீசுவரர் என்ற சிவன் கோயிலையும், தனது வெற்றியின் அடையாளமாக அவன் கட்டினான்.
அதன் தொடர்ச்சியாக முதலாம் ராஜேந்திர சோழன் தஞ்சாவூரிலிருந்த தங்களது தலைநகரைப் புதிதாகக் கட்டப்பட்ட இந்தக் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். இது வரலாறு. கி.பி 1279 இல் சோழர்கள் ஆட்சி முடியும் வரை இந்நகரம் 250 ஆண்டுகளுக்கு மேல் சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

இப்போது இந்தச் சோழீசுவரர் கோயில், அரியலூர் மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்தக் கோயிலை, தரம் உயர்த்த வேண்டி அரசு இதன் வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கோயில் கோபுரங்கள் எனப் பல பகுதிகள் இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. ஒரே ஒரு தளம் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
ஆகவே, பல கட்ட அனுமதிகளைப் பெற்ற பிறகே தமிழக அரசு தனது பணிகளை மேற்கொள்ளும் என்கிறார் இதே பகுதியில் கள ஆய்வாளராக இருந்து வரும் ஒரு ஆராய்ச்சியாளர்.

நம்மிடம் இது குறித்துப் பேசிய அதிகாரி ஒருவர், "இங்குள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே முக்கிய தேவை. அதற்காக 5 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது.
நவீனக் கழிப்பறைகள், வாகனம் வாகன நிறுத்துமிடம், விளக்குகள் அதிகப்படுத்தித் தருவது, தரமான குடிநீரை வழங்குவது ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவடையும்" என்கிறார்.
சித்தன்னவாசல் வளர்ச்சிக்கு ரூ.4 கோடி

இதைப் போலவே சமண தலமான சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கிமு 1ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 10 ஆம் நூற்றாண்டு வரை சமண மதம் செழித்து வளர்ந்த இடம்.
இங்குள்ள குகைக் கோயிலானது பல்லவ அரசன் முதலாம் மகேந்திர வர்மன் (கி.பி. 580-630) சமணத்திலிருந்து சைவ மதத்திற்கு மாறுவதற்கு முந்தைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
பூம்புகாருக்கு ரூ.23.60 கோடி ஒதுக்கீடு
அடுத்த சுற்றுலாத் தலம் பூம்புகார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி இதை வைத்து ஒரு திரைக் காவியமே தீட்டியுள்ளார். அந்தப் பூம்புகாரில் ரூ 2.57 கோடி செலவில் நடைபெற்று வந்த முதற்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதற்குள்ளாகவே அடுத்த சர்ப்ரைஸ் தந்துள்ளது தமிழக அரசு. இரண்டாம் கட்ட பணிக்காக ரூ.23.60 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
தற்போது முதற்கட்டமாகச் சிலப்பதிகாரம் கலையரங்கம், பாவை மன்றம், இலஞ்சி மன்றம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றார் ஒரு அதிகாரி. இதன் இரண்டாம் கட்டடப்பணிகள் விரைவில் நடைபெற உள்ளன.

சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சார்பாகப் பூம்புகார் பகுதி கடல் அடியில் ரிமோட் சென்சிங் துறையின் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 15,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைய துறைமுகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டும் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையான பிரதிகள் எனக் கூறப்படுகிறது.
ஆனால் முதன்முறையாக அதனை மெய்ப்பிக்கும் வகையில் துறைமுக நகரம் இருந்தது இந்த ஆராய்ச்சியின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பூம்புகார் சுற்றுலாத் தலத்தை அரசு தற்போது மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் பூம்புகாரைச் சுற்றித் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ள இடத்தை மயிலாடுதுறை ஆட்சியர் சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இந்த வேலைகள் யாவும் டிசம்பருக்குள் முடிவடையும்' என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இவைத் தவிர, தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 3 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications