பூந்தமல்லியில் திடீர் ‛புழுதிப்புயல்'.. நடுங்கிப்போன இளைஞர்கள்.. சென்னை சூறைக்காற்றால் சம்பவம்
சென்னை: சென்னையில் இன்று மாலையில் கடும் சூறைக்காற்றுக்கு நடுவே கனமழை பெய்தது. இந்த சமயத்தில் பூந்தமல்லி காந்தி நகர் விளையாட்டு மைதானத்தில் வீசிய சூறைக்காற்றால் புழுதிப்புயல் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் விளையாடிய இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வீடுகளில் மதிய வேளைகளில் ஏசி, ஃபேன் இன்றி மக்களால் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே தான் இன்று அக்னி நட்சத்திரம் வேற தொடங்கி உள்ளது. இதனால் வரும் நாட்களில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் என்பது இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே தான் இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையை எடுத்து கொண்டால் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. அதன்பிறகு பிற்பகலில் சென்னையில் வெயில் குறைய தொடங்கியது. காற்றுடன் கருமேகங்கள் சூழ்ந்தன.
அதன்பிறகு மாலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதற்கிடையே தான் பூந்தமல்லியில் உள்ள காந்தி நகர் விளையாட்டு மைதானத்தில் இன்று கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான இளைஞர்கள் தங்களின் அணி சார்பில் போட்டியில் பங்கேற்றனர். மேலும் போட்டியை பார்க்கவும் நிறைய பேர் திரண்டு இருந்தனர். இதற்கிடையே தான் மாலையில் திடீரென்று சூறைக்காற்று வீசியது. இந்த காற்றின் காரணமாக மைதானத்தில் இருந்து புழுதி மேலெழும்பி பறக்க தொடங்கியது. புழுதிப்புயல் போல் மைதானம் காட்சியளித்தது.
இதனால் கிரிக்கெட் விளையாடியவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் சூறைக்காற்றுக்கு நடுவே புழுதி பறந்த மைதானத்தில் தங்களின் முகத்தை முடிக்கொண்டு நின்றனர். இந்த புழுதிப்புயல் சில நொடிகள் வரை நீடித்தது. அதன்பிறகு மைதானம் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து இளைஞர்கள் மீண்டும் விளையாட்டை தொடங்கினர்.
அதேபோல் பூந்தமல்லியில் தனியார் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தின் மேற்கூரைகள் இன்றைய சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்டன. திரையரங்கின் முன்பகுதி சரிந்து விழுந்துள்ளது. யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications