பிஎஸ்டி கட்டுமான நிறுவனம், தென்னரசு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு.. காரணம் தெரியுமா?
சென்னை: பிஎஸ்டி கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. தென்னரசு, அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வரும் நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் போன்ற அதிமுக சீனியர்களுக்கு நெருக்கமானவராக அறியப்படும் தென்னரசு புளியந்தோப்பில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய புகாரில் சிக்கியவராகும்.
8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! 2 படகுகளுடன் 23 தமிழக மீனவர்கள் கைது!
சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு தொடங்கி பல மருத்துவக் கல்லூரி கட்டிடங்களை இவர் நிறுவனம் பிஎஸ்டி கட்டியிருக்கிறது.
1500 கோடி திட்டங்கள்
எல்.அண்டி, கிரசண்ட் குரூப் அப்துல் ரஹ்மானின் ஈஸ்ட் கோஸ்ட் கட்டுமான நிறுவன குழுமங்களுக்கு போட்டியாக பொதுப்பணித்துறை பணிகளை தென்னரசு நிறுவனம் மேற்கொண்டு வந்தது. தற்போது 1500 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டிட பணிகள் இதன் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் புளியந்தோப்பு அடுக்குமாடி கட்டிட விவகாரத்தில் இவரது நிறுவனம் பெயர் ரொம்பவே கெட்டு விட்டது. கட்டிடத்தை தொட்டாலே உதிர்ந்துவிடும் அளவுக்கு அங்கு நிலைமை இருந்ததுதான் இதற்கு காரணம்.
இளங்கோவனுடன் தொடர்பு
இதனிடையேதான் இன்று, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 6 மணிமுதல் சோதனை நடத்தி வருகின்றனர். சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், தென்னரசு இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதன் அடிப்படையில், தென்னரசுக்கு சொந்தமான நாமக்கல்லிலுள்ள பிஎஸ்டி நிறுவனம், நாமக்கல் அருகேயுள்ள அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
அறக்கட்டளையில் பங்கு
சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அடிப்படையில்தான் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. இளங்கோவன் நடத்தி வரும் ஒரு அறக்கட்டளையில், தென்னரசு பங்குதாரராக இருப்பதாகவும் சோதனையின் பின்னணிக்கு இது ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
தென்னரசுவிடம் விசாரணை
காலை 6 மணி முதல் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தென்னரசுவிடம் அவரது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் என்னென்ன பணிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளக்கம்
டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கட்டுப்பாட்டில் இருப்பதால் நிறுவனத்தின் சார்பில் இதுகுறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை. நிருபர்கள் தொடர்பு கொண்டபோதும், பதிலளிக்க முடியாத நிலையில் இருப்பதாக நிறுவனம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.