சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை - பணம், தங்கம் வைரம் பறிமுதல்
சென்னையில் சுற்றுச்சூழல்துறை அதிகாரியின் அலுவலகத்திலும் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.10.5 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை: சுற்றுச்சூழல் துறை அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகம், வீடுகளில் 16 மணி நேரம் நடந்த தொடர் சோதனையில் கணக்கில் வராத ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் பணம், மூன்று கிலோ தங்க நகைகள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், 10 கேரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சொத்து ஆவணங்கள், வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பனகல் மாளிகையில், சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் பாண்டியன். இவர் மீது ஏகப்பட்ட லஞ்சப் புகார்கள் எழுந்தன. தற்போது தமிழக கடலோரப் பகுதிகளில், வனப்பகுதிகளில் நடைபெறும் கட்டுமானம், தொழிற்சாலைகளுக்கெல்லாம் அனுமதி சான்றிதழ் வழங்குவதில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. பாண்டியன் பலமுறை லஞ்சம் வாங்குவதாக புகார் அளித்தாலும், பாண்டியனுக்கு ஆதரவாக மாசுக்கட்டுப்பாட்டு உயர் அதிகாரி செயல்படுவதாக தெரியவந்தது.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கியுள்ளார் பாண்டியன்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் என்பவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் மட்டும் 89,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது வங்கி கணக்கை சோதனை செய்து பார்த்த போது 38,66,000 ரூபாய் கணக்கில் வராமல் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியனின் வீட்டில் பல மணிநேரம் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 1,32,00,000 ரூபாய் ரொக்கமும் மூன்று கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்கிழமை வரை 16 மணி நேரம் நடந்த தொடர் சோதனையில், கணக்கில் வராத ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் பணம், மூன்று கிலோ தங்க நகைகள், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள், 10 கேரட் வைரம், 7 கோடி ரூபாய் மதிப்பிலான 18 சொத்து ஆவணங்கள், வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தற்போது சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியன் லஞ்ச விவகாரத்தில் தரகர் போன்று செயல்பட்டுள்ளதால்,தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று லஞ்ச ஒழிப்பு போலிசார் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications