இவங்க பிளான் என்னன்னே தெரியலையே.. இவர் போய் ஏன் அவரை பார்க்கணும்.. மதுரையில் பரபரப்பு!
எடப்பாடியாருக்கு பெருமளவு ஆதரவு குவிந்துள்ளது
சென்னை: "கட்சியை எடப்பாடியார் நிச்சயம் விட்டுத்தர மாட்டார்.. அதேசமயம், வரப்போகிற தேர்தலில் இந்த இரண்டு விஷயத்தை மட்டும் செய்தாலே போதும்.. மீண்டும் எடப்பாடியாரே முதல்வர்" என்று அடித்து சொல்கின்றனர் அதிமுகவின் தீவிர தொண்டர்கள்!
அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையேயும் முரண்பாடு ஏற்பட்டது... இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய அமைச்சர்கள் முயன்று வருகின்றனர்.. ஆலோசனை கூட்டமும் நடக்கிறது.. நாளை முதல்வர் வேட்பாளர் பெயர் சமரசத்திற்கு பிறகு அறிவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, நடந்து வரும் பிரச்சனைகள் குறித்தும், கட்சி தலைமையின் முடிவு குறித்தும், அதிமுக தேர்தலை எப்படி சந்திக்கும் என்பது குறித்தும், அக்கட்சியின் சில நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களிடம் பேசினோம்.. யூகங்களாகவும், யோசனைகளாகவும் அவர்கள் சொன்ன கருத்துக்கள்தான் இவை:

வாய்ப்பு
"சாதிச்சிட்டார் எடப்பாடியார்.. அப்படித்தான் சொல்லணும்.. இன்னும் பாருங்க, கட்சியை அவர் விட்டுத்தர வாய்ப்பே இல்லை.. இருக்கிற பதவியில் ஓபிஎஸ் தொடருவதுதான் நல்லதா இருக்கும்ன்னு தோணுது.. உண்மையை சொல்ல போனால், இந்த வழிகாட்டுதல்குழு என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.. 2017-ல் கொண்டுவந்த தீர்மானத்துக்கு இப்போ ஏன் அவசரம் காட்டணும்? கண்டிஷன் போடணும்? தேர்தலுக்கு 7 மாசம் இருக்கு.. இந்த வழிகாட்டிக்குழு வைத்து எந்த விதமான பலனும் இரு தரப்புக்கும் இருக்காது.. இது ஒரு அதிகார சாக்கு.. அவ்வளவுதான்.. கட்சியை தன்னிடம் ஒப்படைக்க ஓபிஎஸ் பிடிவாதம் காட்டுறார்.. இது சாத்தியம் இல்லை.

செல்வாக்கு
இதுக்கு காரணம், எடப்பாடி கொங்கு மண்டலத்தை ஆரம்பத்தில் இருந்தே வலுவா வெச்சிருக்கார்.. திமுகவை இந்த முறையும் தலைதூக்க விடாத அளவுக்கு அங்கே செல்வாக்கு இருக்கு... அதேமாதிரி தென் மண்டல அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆதரவும் இருக்கு.. இதுல ஓரிருவர் வெளிப்படையான ஆதரவை ஓபிஎஸ் முன்னிலையில் காட்டிக் கொள்ளவில்லை.. ஆனால், எடப்பாடியாருக்கு ஃபுல் சப்போர்ட் தர்றாங்க.

சீனியர் அமைச்சர்கள்
ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களும் எடப்பாடியாருக்கே தங்கள் சப்போர்ட்டை சொல்லி வர்றாங்க.. ஆனால், கட்சியை ஓபிஎஸ் பக்கம் இனிமேலும் போகாமல் பார்த்துப்பார் எடப்பாடியார்.. இதுல எங்க சந்தேகம் வருதுன்னா, ஓபிஎஸ் ஏன் இப்போது இவ்வளவு பிடிவாதம் காட்டணும்?

நெருக்கம்
பாஜகவுடன் அவரும், அவர் மகனும் நெருக்கமாக உள்ளனர் என்பது தெரியும்.. அதாவது எடப்பாடியாரைவிட கொஞ்சம் அதிகமான நெருக்கம் ஓபிஎஸ் பாஜக மீது வைத்துள்ளார்.. இவரை வைத்துதான் பாஜக தமிழகத்தில் காரியம் சாதிக்க நினைக்கிறதா? ஓபிஎஸ் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. அதேமாதிரி, டிடிவி தினகரன் டெல்லி சென்று வந்ததையும் இங்கு யோசிக்கணும். ஓபிஎஸ்ஸை வைத்து, டிடிவி தரப்பு மறுபடியும் அதிமுகவில் நுழைய முயற்சிக்கிறதா என்ற சந்தேகமும் உள்ளது.

பிடிவாதம்
ஒருவேளை இது எதுவுமே இல்லையென்றாலும், கட்சி தலைமை தன்னை மதிக்காத விரக்தி, முக்கியத்துவம் இல்லாதது போன்ற ஆதங்கத்தில் ஓபிஎஸ், பிடிவாதம் காட்டுகிறரா என்றும் தெரியவில்லை.. இப்படி நிறைய குழப்பங்கள் இருந்தாலும், இதுதான் உறுதியான காரணம் என்பதை சொல்ல முடியவில்லை. கட்சியில் கிட்டத்தட்ட 99 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடியார் பக்கமே நிற்கிறார்கள்... இந்த முதல்வர் வேட்பாளர் என்பதுகூட தேர்தல் வரைக்கும்தான்.. ஆனால், தேர்தலில் அமோக வெற்றியை அதிமுக பெறுவது என்பது வரப்போகிற இந்த 7 மாதத்தில்தான் அடங்கி உள்ளது.

பாஜக
தமிழக மக்களுக்கு எடப்பாடியார் நிறைய செய்திருக்கிறார்.. அதை இல்லேன்னு சொல்லிட முடியாது.. ஆனாலும் எங்கோ ஒரு இடத்தில் ஒன்றிரண்டு குறை தென்பட்டு கொண்டே இருக்கிறது.. இந்த 7 மாசத்தில் அதிக அளவு நலத்திட்ட உதவிகளை செய்து, மக்களை தன்வசப்படுத்த வேண்டும், மற்றொன்று, பாஜகவுடன் இதே கெத்து போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.. இதை இரண்டையும் செய்தாலே, நிச்சயம் எடப்பாடியார் ஆட்சியை பிடிப்பார்.. எந்த அளவுக்கு பாஜக எதிர்ப்பு தென்படுகிறதோ, அந்த அளவுக்கு வெற்றியின் நிர்ணயமும் முடிவாகும்... இது ஓபிஎஸ் - இபிஎஸ் என்ற இரு பிம்பங்களின் கையில்தான் உள்ளது: என்று முடித்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications