விரைவில் சென்னையில் முழு ஊரடங்கு? பிற மாவட்டங்களுக்கு இ பாஸ் ரத்து.. தனிமைப்படுத்தப்படும் தலைநகரம்
சென்னை: சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு பயணிப்பதற்கு, இ பாஸ் வழங்கும் வசதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுபோன்ற அதிரடி நடவடிக்கை துவங்கியுள்ளது.
ஐந்தாவது கட்ட ஊரடங்கு காலகட்டம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு, மாவட்டங்களுக்கு உள்ளே மட்டும் பயணிக்க அனுமதித்த நிலையில் தற்போது அருகே உள்ள மாவட்டங்களில் சேர்த்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள்ளே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மண்டலங்களுக்கு வெளியே செல்ல வேண்டுமானால் இ பாஸ் பெறுவது கட்டாயம் ஆகும். பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து மண்டலங்களுக்கு உள்ளே மட்டும் நடைபெற்று வருகிறது. வேறு மண்டலங்களுக்கு இடையே கிடையாது.
அதிகரித்து வரும் கொரோனா கேஸ்கள்.. சென்னையில் முழு லாக்டவுனா?.. ஹைகோர்ட் கேள்வி
பிற மாவட்டங்களுக்கு ஆபத்து
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியே செல்வோர் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளுக்கு நாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது அதிகரித்தபடி இருக்கிறது. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், சென்னையிலிருந்து பாஸ் பெற்றுக் கொண்டு பிற மாவட்டங்களுக்கு செல்ல கூடியவர்களால், அந்த மாவட்டங்களிலும் கொரானா அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
சென்னைக்கு கடிவாளம்
பிற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய நிலையில், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்ட மக்களால், பிற மாவட்டங்களில் நிலைமை மோசமானால், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு நிலை குலைந்து விடும் சூழ்நிலை உருவாகிவிடும். இதை தடுப்பதற்கு சென்னைக்கு கடிவாளம் போடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
15 நாட்கள் கடையடைப்பு
எனவே, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு பாஸ் கொடுப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாசுக்கு விண்ணப்பித்த பலருக்கும், கடந்த சில நாட்களாக பாஸ் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொரு பக்கம்.., அரசு உத்தரவிட்டால் 15 நாட்கள் கடையை அடைத்து ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று அறிவித்துள்ளது. தமிழக அரசின் நிதித்துறை செயலாளரிடம் நேரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய பிறகு இந்த தகவலை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சீல்படுத்தப்படுகிறதா சென்னை
ஒரு பக்கம் 15 நாட்கள் கடையை அடைப்பதற்கு தயார் என்று வணிகர் சங்கங்கள் கூறுகின்றன. மற்றொரு பக்கம், பாஸ் வழங்கும் நடைமுறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை முழுக்க முழுக்க சீல் செய்யப்பட்ட பகுதியாக மாற போகிறது என்பது தெரிகிறது. இருப்பினும் மக்கள் இதுபற்றி எந்த அச்சப்படவும் தேவையில்லை. ஏனெனில், உரிய முன்னறிவிப்பு செய்து விட்டுதான் அரசு எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் திடீரென ஊரடங்கு அறிவித்ததால் மக்கள் கும்பல் கும்பலாக கடைகளுக்குச் சென்று அதனால் தொற்று பரவிய சம்பவம், அரசின் கவனத்தில் வைத்து உள்ளது. எனவே, குறைந்தது ஒரு வாரம் முன்பே அறிவிப்பு வெளியிட்டுவிட்டுதான், அரசு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை நிலவரம்
சென்னை தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அங்கு பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்படும் என்றும், இந்த பரிசோதனைகளை அதிகரித்து உரிய சிகிச்சை வழங்கப்படுவதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவல் சங்கிலி அறுத்துவிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த மதிப்பில் சுமார் 70 சதவீதத்துக்கும் மேல் சென்னையில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஜெயக்குமார்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சென்னையில் முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியிடுவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. மருத்துவ குழு பரிந்துரை செய்தால், அதை அரசு பரிசீலிக்கும். முதல்வர் தலைமையிலான உயர்மட்டத்தில் எடுக்க வேண்டிய முடிவு இது. எனவே இப்போதைக்கு அது பற்றி கூற முடியாது என்றார்.