இபி 34 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்..பெங்களூருவில் சிக்கிய முக்கிய புள்ளி..தமிழக மின்வாரியம் அதிர்ச்சி
சென்னை: மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி அளித்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் பெங்களூருவில் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த மே 16, 17 ஆகிய தேதிகளில், ஊழியர்கள் குறைவாக இருந்த நள்ளிரவு சமயத்தைப் பயன்படுத்தி நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான அதிமுக்கிய தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரத்தில் தி.மு.க-வைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை கோரியிருந்த நிலையில், மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நேரில் ஆய்வு நடத்திய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அதிரடி பேட்டி அளித்தார்.
அப்போது, "யார் யாரையும் காப்பாற்றவில்லை, கண்டிப்பாக யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டனை பெற்றுத்தரப்படும்; யாரும் எதையும் மறைக்க முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி
மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள மின்மாற்றிகளை 13 லட்ச ரூபாய்க்குப் போலி கொட்டேஷன் கொடுத்து வாங்கியதால்தான் இந்த வழக்கு சிபிஐ வரை சென்றுள்ளது என்றும், சோலார் மின்சாரம் மற்றும் சாம்பல் விற்பனையில் புரோக்கர்களுக்குப் பல லட்சம் கமிஷன் தரப்பட்ட கடந்த கால முறைகேடுகளை மூடிமறைக்கவே இந்தத் திருட்டு நடந்துள்ளது என்றும் நேற்று அமைச்சர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளின் கூடுதல் பிரதிகள் (Backup) வேறு இடங்களில் பாதுகாப்பாக உள்ளதால் தற்போதைய அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அவர் நேற்று தெளிவுபடுத்தியிருந்தார்.
அமைச்சர் இந்த அதிரடி புகார்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, மின்வாரிய அதிகாரி மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இன்று இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக 34 ஹார்டு டிஸ்க்குகள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோபிநாத் கைது
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரைக் காவல் துறையினர் இன்று கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் இந்த அதிமுக்கிய ஹார்டு டிஸ்க்குகளைப் பெங்களூருவுக்குக் கொண்டு சென்று ரகசியமாக விற்பனை செய்தது அம்பலமானது. இதையடுத்து, கோபிநாத்தைப் பெங்களூருவுக்கு நேரில் அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 34 ஹார்டு டிஸ்க்குகளையும் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்து சென்னைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
பெங்களூர் நபரிடம் விசாரணை
மேலும் கோபிநாத்திடம் இருந்து இந்த டிஸ்க்குகளை விலைக்கு வாங்கிய பெங்களூரைச் சேர்ந்த நபரையும் இன்று சென்னைக்குக் கொண்டு வந்து போலீஸார் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மின்துறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரப் புதிய டெண்டர் பாலிசி விரைவில் அமலாகும் என்றும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதல் மின்வெட்டு விவரங்கள் வெளிப்படையாகப் பிரசுரிக்கப்படும் என்றும் நேற்று அமைச்சர் உறுதியளித்திருந்த நிலையில், இன்று ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டு 34 டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மின்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications