திருவண்ணாமலையில் புகார் தந்தவரின் வீடு தேடி சென்று இபி ஊழியர் வில்லங்கம்.. மின்சார வாரியம் அதிரடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஒரு கிராமத்தில் மின்சாரம் அடிக்கடி போவதாக கஸ்டமர் கேரை அழைத்து புகார் கூறிய நபரை வீடு தேடி சென்று மின் ஊழியர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின் ஊழியர், தனது உறவினர் எஸ்ஐ என்றும் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டி செல்வதாக வீடியோவில் இருக்கிறது.
பொதுமக்கள் யாராக இருந்தாலும் தங்கள் ஏரியாவில் ஏற்படும் மின்தடை, பொதுவான மின்தடை அல்லது அவசர அழைப்புகளுக்கு நுகர்வோர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், சென்னையில் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, "மின்னகத்தை" 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க முடியும்.

சேதமடைந்த மின்கம்பம், தொங்கலான மின் கம்பிகள், திறந்த நிலையிலுள்ள/ சேதமடைந்துள்ள தெருவிளக்குப் பெட்டி, மின் விநியோகப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர்கள் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன இருந்தால் நுகர்வோர்கள் அவர்களுடைய கைபேசியில் போட்டோ எடுத்து அவைகளை "வாட்ஸ் அப்" எண்ணிற்கு அனுப்ப முடியும். அதற்காக மாவட்ட வாரியாக வாட்ஸ்-அப் எண்ண்கள் அறிவிக்கப்பட்டும் உள்ளன.
மற்ற வகை புகார்களான மின்மாற்றி, மின் கம்பம், தெருவிளக்குப் பெட்டி, மின்விநியோகப் பெட்டி, மின் அளவி பழுது, குறைவான அதிகமான மின் அழுத்தப் புகார்கள், கேபிள் பழுது, தீப்பொறி, மின் அமைப்பில் தீ விபத்து, பட்டியிடல் புகார்கள், புதிய மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்கள், மறு மின் இணைப்பு, மின் தரம், தாமத சேவை, சேவை குறைபாடு, மின்சாரம் தொடர்புடைய பிற புகார்கள், குறைகளை மின்னகம் - மின் நுகர்வோர் அழைப்பு மையத்தை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்ய முடியும். மேலும், புகார்களை www.tangedco.gov.in என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக வலைதள பக்கத்தில் பதிவு செய்ய முடியும்.
புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவகத்தில் பதிவு செய்யலாம். புகார்கள் தீர்க்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் ஆகியோரை அணுகலாம். ஒவ்வொரு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் குறை தீர்க்கும் கூட்டத்தை அனைத்து கோட்ட அலுலகத்திலும் ஒவ்வொரு மாதமும் நடத்துகிறார்கள். குறைகளை இந்த குறை தீர்க்கும் கூட்டத்தின் போது மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்க முடியும்.
அதேநேரம் மேலே சொன்ன வழிகளில் குறை தீர்க்கப்படவில்லை என்றாலும் கூட, அவைகளை மின்சார விதி 2003 ஷரத்துக்களின் படி ஒவ்வொரு மின் பகிர்மான வட்டத்திலும் ஏற்படுத்தப்பட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திடம் சமர்ப்பிக்க முடியும். இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறையாகும். இதன்படியே பலரும் தமிழகத்தில் மின்சாரம் தொடர்பாக புகார்களை "மின்னகத்தின்" 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கிறார்கள்..
அப்படித்தான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கீழ்ப்பட்டு கிராமத்தில் வசிக்கும் ஒருவர் தங்கள் ஏரியாவில் அடிக்கடி மின்சாரம் இருப்பது இல்லை என்று "மின்னகத்தின்" 94987 94987 என்ற எண்ணில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு மின்னக ஊழியர்கள், குறிப்பிட்ட மின்சார அலுவலகத்திற்கு அறிவுறுத்துவார்கள்.
இந்நிலையில் மின்சாரம் இருப்பது இல்லை என்று அடிக்கடி புகார் அளித்தவர்கள் குறித்து அறிந்த மின் ஊழியர், ஆவேசத்துடன் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது மின் ஊழியர் அவரிடம் புகார் அளிக்கக்கூடாது எனறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மின் ஊழியர் கூறுகையில், "மின்சாரம் என்பது வரும் போகும்.. எல்லாவற்றுக்கும் புகார் அளிக்கக்கூடாது.. ஒரு மணி நேரம் இல்லையா.. இரண்டு மணி நேரம் ஆகலாம்.. 4 மணி நேரம் அல்ல 40 மணி நேரம் கூட ஆகலாம்.. உனக்கு என்ன பிரச்சனை. அங்கு என்ன வேலை நடக்கிறது என்று உனக்கு என்ன தெரியும்.. என் மச்சான் டவுன் எஸ்ஐ. உன்மேல் புகார் கொடுத்திடுவேன்" என்று மிரட்டுவதாக வீடியோ இருக்கிறது. இந்த வீடியோவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications